தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனைப் பாராட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏறாவூர் மத்திய செயற்குழு அறிக்கை ஒன்றினை இன்று ( வியாழக்கிழமை ) வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏறாவூர் மத்திய செயற்குழுவின் கொள்கை பரப்புச் செயலாளர் யூ.எல். முஹைதீன் பாபாவினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில்,
கிழக்கு மகாண சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இருந்து வந்த இழுபறி நிலைமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராசம்பந்தன், சமயோசிதமாக அரசியல் பட்டறிவு சாணக்கியத்துடன் எடுத்த முடிவு கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் இன ஐக்கியத்தை வலுப்படுத்த உதவியுள்ளது.
இது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும். கிழக்கு மாகாண சபை ஆட்சியமைப்பு தொடர்பில் கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் இன முறுகல் ஏற்பட்டு விடுமோ என அனைவரும் அஞ்சிக் கொண்டிருந்த சமயத்தில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனில் எடுக்கப்பட்ட துணிச்சலும் அரசியல் சாணக்கியமும் மிக்கதான இறுதி நேர இந்த முடிவானது இரு இனங்களுக்கிடையிலும் நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.