Featured Home (TOP)

Recent Comments

Friday, July 17, 2015

Unknown

"நல்லாட்சியை வலுப்படுத்தும் சுயபிரகடனத்தை இப்பெருநாள் தினத்தில் மேற்கொள்வோம்" பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

(ஊடகப்பிரிவு,நல்லாட்சிக்கான தேசிய முன்னணி)

இஸ்லாம் வலியுறுத்தும் நல்லாட்சியை இந்த நாட்டில் வலுப்படுத்தும் தீர்மானமெடுக்கின்ற நன்னாளாக, இன்றைய பெருநாள் தினத்தை முஸ்லிம்களான நாம் ஒவ்வொருவரும் சுயபிரகடனம் செய்து கொள்வோம் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ.ல.மு.கா.வுடன் இணைந்து 2ம் இலக்கத்தில் போட்டியிடுபவருமான பொறியியலாளர் அப்துர் றஹ்மான் தெரிவித்தார்.
'ஈதுல் பித்ர்' புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள பொறியியலாளர் அப்துர் றஹ்மான், மேலும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
"இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில், பதினொரு மாதங்களுக்கு ஒரு முறை சூரிய உதயத்திலிருந்து அஸ்தமனம் வரைக்கும் தமது மனவெழுச்சிகளை ஒரு மாத காலத்திற்கு இறைவனுக்காக முற்றாகத் தவிர்த்திருப்பதும் ஒன்றாகும். இதனையே நாம் நோன்பு எனும் இறைவணக்கமாக நம்பி, கடந்த ஒரு மாதகாலமாக அதனை மிகவும் பயபக்தியுடன் நிறைவேற்றியும் வந்தோம்.
இந்நோன்பிற்கான வெகுமதியான நற்கூலியை தானே நோன்பாளிகளுக்கு வழங்குவதாக இறைவன் வாக்களித்துள்ளான். இதற்கமைய பகல் வேளைகளில் பசித்தும், தாகித்தும், மனவெழுச்சிகளை அடக்கியும் நாம் நோன்பிருந்ததற்காக இறைவனின் நற்கூலிலைப் பெற்றுக் கொண்டிருப்பதுடன், இரவு வேளைகளிலும் இறையில்லங்களில் தரித்திருந்து பலதரப்பட்ட மேலதிக வணக்கங்களையும் நிறைவேற்றியதற்காக மேலதிகமான பலவாறான நன்மைகளையும் நம்மை விட்டும் கடந்து சென்றுள்ள புனிதமான றமழான் மாதத்தில் நாம் பெற்றுக் கொண்டிருக்கின்றோம்.
இத்தகைய பெரும்பாக்கியமுடைய ஒரு சந்தர்ப்பம் நம்மிடம் மீண்டும் வருவதற்கு இன்னும் பதினொரு மாதங்கள் நாம் காத்திருக்க வேண்டியது ஒருபுறமிருக்க, நமது வாழ்நாளும் அப்பதினொரு மாதங்களுக்கு நீடித்திருக்க வேண்டியதும் அவசியமாகும். ஆனால் அந்த ஆயுள்நீடிப்புக்கு நம்மில் யாரிடமும் எந்த உத்தரவாதமும் கிடையாது.
இஸ்லாத்தின் வழிகாட்டல்கள் எல்லாமே மனிதகுலத்திற்குப் பொதுவான நல்லாட்சியையும், நல்வாழ்வையும் வலியுறுத்தியே கட்டமைக்கப்பட்டுள்ளது என்கிற அடிப்படை உண்மையை இன்று புனிதப் பெருநாள் தினத்தைக் கொண்டாடி மகிழும் முஸ்லிம்களான நாம் உற்றுணர வேண்டும்.
முஸ்லிம்கள் ஒவ்வொருவர் மீதும் தான் வாழும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு வழிப்பட்டு வாழ்வது அவசியமாக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கை முஸ்லிம்களான நாம் நாட்டின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்வதுடன், ஜனநாயகத்திற்கு அமைவாக நல்லாட்சியொன்று நடைபெறுவதற்கும் எமது
பங்களிப்புக்களைச் செய்ய வேண்டியதும் அவசியமாகும்.
அந்த வகையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இந்நாட்டு மக்களால் அங்கீகரிக்கப்பட்ட நல்லாட்சி நிர்வாகம், எதிர்வரும் நாடாளுமன்றத்திலும் வலுவடைய எமது கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும்.
ஜனநாயகத்தை மாத்திரம் நாம் உதட்டளவில் ஏற்றுக்கொண்டு, சட்டம் ஒழுங்கை நமது வாழ்க்கையில் பேணி நல்லாட்சி நிர்வாகமொன்று நாட்டில் செழிப்படைய வழிவகுக்க மறுப்பதானது, நமது மனவெழுச்சிகளை இறைவனுக்காகத் தவிர்த்துத் தியாகம் செய்யாமல் வெறுமனே பசித்தும், தாகித்தும் இருந்ததற்கான
கூலிக்கொப்பான விளைவையே நமக்குத் தரும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, இன்று இப்புனித பெருநாளைக் கொண்டாடும் நாம், இதைத் தொடர்ந்து இந்த நாட்டில் அதிகாரபலமுடைய அதியுயர்ந்த சட்டவாக்க சபையொன்றுக்கு நமது பிரதிநிதிகளையும் தெரிவு செய்ய வேண்டிய தேசியக் கடமைப்பாட்டை தோள்களில் சுமந்து கொண்டிருக்கின்றோம்.
எமது மாவட்டத்திலும், எமது தேசத்திலும் மக்கள் யாவரினதும் சுபீட்சமான நல்லாட்சி நிர்வாகமொன்றை ஸ்திரமாக அமைப்பதற்கு தமது கரங்களில் தரப்பட்டுள்ள வாக்குப்பலம் எனும் சாட்சியத்தை தரமும், தகுதியுமுடையவர்களுக்கு மனச்சாட்சிக்கு இடமளித்து நமது சமூகத்தின் அமானிதமாகக் கையளிப்பதற்கு முன்வர வேண்டும்.
அவ்வாறு ஒரு சுயதீர்மானத்தை நமக்குள் நாமே எடுத்துக் கொள்ளுகின்ற ஒரு நாளாக இன்றைய நன்னாளை நாம் பிரகடனப்படுத்திக்கொள்வோம்.
இன்று எல்லாம் வல்ல அல்லாஹ்வைத் துதித்து, வணங்கி, இஸ்லாமிய நற்சிந்தனைகளை உள்ளங்களில் பதித்து, புத்தாடைகளால் தம் உடல்களை அழகுபடுத்தி, உறவுகளுடன் ஒன்றமர்ந்து உணவருந்தி பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனதும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினதும் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.
.


Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :