அன்று மதிப்புக்குரிய பாத்திரமாக இருந்த அரசியல்வாதி கடந்த இரண்டு தசாப்தங்களில் மதிப்பற்ற ஒரு பாத்திரமாக மாறியதற்கு காரணம் விருப்புக்குரிய வாக்கு முறையாகும் என தெரிவித்த ஜனாதிபதி அந்த தவறை உடனே திருத்தி நன்நடத்தையுள்ள அரசியல் கலாசாரம் ஒன்றை மீண்டும் நாட்டில் கட்டியெழுப்புவவுள்ளதாக தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்த 07 ஆம் திகதி பிற்பகல் ரத்மலான பௌத்த சங்க (YMBA) மண்டபத்தில் நடைபெற்ற முன்னாள் அமைச்சரான காலம் சென்ற சி.வி.குணரத்ன அவர்களின் 15 ஆவது ஞாபகார்த்த நிகழ்வில் கலந்துகொண்டபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஊழல், ஒழுங்கீனம், அரச அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல், அரச வளங்களை தமது குடும்பத்தவர்களின் ஆடம்பர வாழ்வுக்காக பயன்படுத்துதல் போன்ற விடயங்களினால் இந்நாட்டு அரசியலின் நேர்மைத்திறன் அழிந்துபோய் உள்ளது எனத் தெரிவித்த ஜனாதிபதி, தமது ஆடம்பர வாழ்வுக்காக அன்றி, மக்களின் நல்வாழ்வுக்காக செயலாற்றுகின்ற அரசியல்வாதிகளை மீண்டும் இந்நாட்டில் கட்டியெழுப்ப வேண்டுமெனத் தெரிவித்தார்.
அத்துடன் அசியல்வாதி சமூகத்திற்கு கீழ்படிகின்ற நபராக இருக்க வேண்டுமெனவும் அவ்வாறு இல்லா விட்டால் சமூகத்திலிருந்து நிராகரிக்கப்படுவார் எனவும் கூறினார்.
நன்நடத்தைமிக்க அரசியல்வாதியாக இருந்த சி.வி.குணரத்னவின் பண்புகளை இதன்போது நினைவு கூர்ந்த ஜனாதிபதி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காக அவர் ஆற்றிய மாபெரும் சேவையைப் பாராட்டினார். தெஹிவளை, கல்கிஸ்ஸ மாநகர சபையின் முன்னாள் தலைவராக, பாராளுமன்ற உறுப்பினராக, முன்னாள் கைத்தொழில் அமைச்சராக இருந்த சி.வி.குணரத்ன அவர்கள் 2000 ஆம் ஆண்டில் புலி பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதலில் உயிர் நீத்தார்.
நினைவுதின விழாவில் மேல் மாகாண சபை உறுப்பினர், சட்டத்தரணி, கீர்த்தி உடவத்த அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அத்துடன், முன்னாள் ஆளுநர் லயனல் பெர்னாந்து சிறப்புரை நிகழ்த்தினார். அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க, ஏ.எச்.எம்.பௌசி, மொகன்லால் கிறேரு, சந்தன கத்திரியாராச்சி ஆகியோருடன் சி.வி.குணரத்ன அவர்களின் மூத்த சகோதரரான ஜெரி குணரத்ன அவர்களும் குடும்ப உறவினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
news.lk
