சிறுவர், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும், இத்தகைய செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு உச்சபட்ட தண்டனை வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தியும் கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நாளை வியாழக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடைபெறவுள்ளது.
ஐக்கிய சமாதான முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வாளர்களும் அரசியல் பிரமுகர்களும், பெண்செயற்பாட்டாளர்கள் உட்படப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
அத்துடன், ஆர்ப்பாட்டத்தின் முடிவில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு மகஜரொன்றும் கையளிக்கப்படவுள்ளது. “நாட்டில் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன. ஏதேனும் ஒரு சம்பவம் நடைபெறும்போதுமட்டும்தான் தண்டனை பற்றி பேசப்படுகிறது.
இதனால், கொடூரமான சம்பவங்கள் தொடர்ந்தவண்ணமேயுள்ளன. எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும். கொடகத்தேன சிறுமி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.
வடக்கில் வித்தியாவும் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார். எனவே, நாட்டில் இனியும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற இடமளிக்கக்கூடாது.
அதற்கு காத்திரமான சட்டதிட்டங்கள் அவசியம். இதை அமுல்படுத்துவதற்கு நீதி அமைச்சு முன்வரவேண்டும்” – என்று மேற்படி முன்னணியின் தலைவர் ஐ.என்.எம். மிப்லார் தெரிவித்தார்.
