புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்
காத்தான்குடியில் திறந்து வைக்கப்பட்ட 'இஸ்லாமிய நூதனசாலை' தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாக்குழு இணைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். ஹாரிஸ் ரஷாதி, காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பருக்கு நேற்றைய தினம் (15.04.2015) கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபைக்கும் பிரதியடப்பட்டுள்ள அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு
காத்தான்குடி முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஊராகும். அறிஞர்கள், துறைசார்ந்தவர்கள் அங்கு நிறைந்து காணப்படுவது சிறப்பம்சமாகும். கிழக்கிலங்கையில் மாத்திரமன்றி நாடளாவிய ரீதியில் இவ்வூர் விஷேடமாகக் கருதப்படுவது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.
இந்நிலையில் மனிதர்களை ஒத்த உருவச்சிலைகளை உள்ளடக்கியதான நூதனசாலையொன்று அங்கு ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும், அது சம்பந்தமான மார்க்கத் தீர்;ப்பைக் கோரியும் ஜம்இய்யாவின் காத்தான்குடிக் கிளை 21.03.2015ஆம் திகதியில் கடிதமொன்றை தலைமையகத்துக்கு அனுப்பி வைத்திருந்தது.