(ரா.ப.அரூஸ்)
இலங்கை ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்புக்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு மாணவர்களைத் தயார் படுத்தும் பொருட்டு வடமத்திய மாகாணத்தில் ஆங்காங்கே இடைவிடாது கருத்தரங்குகள் தற்போது இடம்பெற்றவண்ணமிருக்கின்றன. அத்தகைய கருத்தரங்கொன்றில் மாதிரி வினாத்தாளில் பின்வருமாறு வினாவொன்று இடம்பெற்றிருந்தது.
''ஒருவர் தனது காதலியை இரகசியமாகச் சந்திக்கச் செல்வதற்கு அவளின் வீட்டிலுள்ள 5 வாயில்களில் ஏதாவதொன்றைப் பயன்படுத்தலாம். ஆனால் சென்ற வாயிலால் மீண்டும் திரும்பி வந்தால் அவன் மாட்டிக் கொள்வான். எனவே அவனுக்கு தனது காதலியின் வீட்டினுள் உட்சென்று வெளியேறுவதற்கு ஒன்றுக்கொன்று வேறுபட்ட எத்தனை முறைகள் உண்டு?''
இதில் பல விடயங்களை நாம் சிந்திக்கவேண்டியிருக்கிறது.
01. ஒரு மாணவ சமூகத்திடம் இத்தகைய விடயங்களை (காதலியை இரகசியமாகச் சந்தித்தல்) ஒரு ஆசிரியரோ அல்லது வளவாளரோ சர்வசாதாரணமாகப் பகிர்ந்துகொள்ளுதல் பண்பாட்டுச் சீரழிவின் ஓர் எடுத்துக்காட்டேயாகும்.
02. மாதிரி வினாத்தாள் ஒன்றில் உதாரணம் காட்ட வேறு விடயமே உலகில் இல்லையா...?
03. கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் போட்டிப் பரீட்சையொன்றுக்கான மாதிரி வினாத்தாளில் இத்தகைய விடயங்களை உள்ளடக்குதல் ஒரு தேசத்தின் கல்வி அமைச்சினையே கேவலப்படுத்துவதாய் அமையாதா...???
04. மேற்படி வினாவின் அடிப்படையில் இதற்கு விடை காண்பது காதலியை இரகசியமாய்ச் சந்திக்கச் சென்று வெளியேறுவதற்கான வழிகாட்டலல்லவா???
ஆசிரியர்களாக உள்ளீர்க்கப்பட இருப்போர்களே இத்தகையவாறு வழிகாட்டப்பட்டால் இவர்களால் வழிகாட்டப் படவிருக்கின்ற இளம் மாணாக்கர்ளின் நிலைமை என்னவாக இருக்கும் என்று நாமனைவரும் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். நல்ல பண்பாட்டை மாணாக்கரில் விதைக்கவேண்டிய கல்வி இன்று அவைகளைக் குழிதோண்டிப் புதைத்துக்கொண்டிருக்கிறது. இவ்வாறான மிலேசத் தனங்களின் விளைவுதான் இன்று எமது மாணவர்கள் சர்வசாதாரணமாக நெறிபிறழ்வதற்குக் காரணமாக அமைந்துவிடுகின்றது.
எனவே இனி வரும் காலங்களிலாவது இவ்வாறான விடயங்களில் சம்பந்தப் பட்டவர்கள் சிந்தித்துச் செயற்படவேண்டும்.
குறிப்பு: குறித்த வினாத்தாளின் பிரதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.