( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் 20வது வருடாந்த நிறை விழாவில் அம்பாரை மாவட்டத்தில் பணிபுரியும் சிரேஷ்ட, கணிஷ்ட
ஊடகவியலாளர்கள் பலர் கௌரவிக்கப்பட்டனர்.
அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் 20வது வருடாந்த நிறைவு விழாவும், ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் நேற்று நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூசனம் மீரா.எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் றவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், பிரதியமைச்சர்களான எம்.சீ.பைசால் காசீம், எச்.எம்.எம்.ஹரீஸ், மாகாண அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஆரீப் சம்சுதீன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இன்னும் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான தினகரன் பிரதம ஆசிரியர் கே.குணராசா, ரூபவாஹினி தமிழ் செய்திப் பிரிவின் பணிப்பாளர் யூ.எல்.யாக்கூப் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு, ஊடகவியலாளர்களையும் கௌரவப்படுத்தினர்.
ரூபவாஹினி தமிழ் செய்திப் பிரிவு பணிப்பாளர் யாக்கூப் கருத்துத் தெரிவிக்கையில்:- 'இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அரச ஊடகங்கள் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடியதான சுதந்திரத்தை வழங்கியிருக்கின்றது' எனத் தெரிவித்தார்.
அமைச்சர் றவூப் ஹக்கீம் இங்கு கருத்தத் தெரிவிக்கையில் 'நான் ஊடகவியலாளர்களை என்றும் மதிக்கின்றேன். சகோதரர் குணராசா, யாக்கூப் சொன்னது மாதிரி இந்த அரசு புதிய ஒரு ஊடககலாச்சாரத்தை உருவாக்கி இருக்கின்றது. நல்ல சுதந்திரத்தை வழங்கி இருக்கின்றது. அதனை முழுமைப்படுத்தும் வகையில் விரைவில் தகவலறியும் சட்டமூலத்தைக் கொண்டு வர இருக்கின்றது. தகவலறியும் சட்டமூலம் வந்தால் அது ஊடகவியலாளர்களுக்கு மேலும் வலுச் சேர்க்கும். மேலும் எமது ஊடகவியலாளர்கள் புலனாய்வுத் துறையிலும் அக்கரை செலுத்த வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.