கொழும்பு -
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முருங்கை மரத்தில் ஏற்றுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால் மஹிந்த ராஜபக்ஷ முருங்கை மரததில் தற்போது ஏறமாட்டார் என்று நம்புகின்றேன் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டுமாயின் அதனை ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் பேசிவிட்டு செய்யலாம். அதற்கு நுகேகொடவில் கூட்டம் நடத்தவேண்டிய தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
கேள்வி: மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்கவேண்டும் என்று நுகேகொட கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதே?
பதில்: மஹிந்த ராஜபக்ஷ சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டுமாயின் அதனை ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் பேசிவிட்டு செய்யலாம். அதற்கு நுகேகொடவில் கூட்டம் நடத்தவேண்டிய தேவையில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு அவர் போட்டியிடலாம். அதற்காக 212 பஸ்களில் மக்களை கொண்டுவரவேண்டிய அவசியமில்லை.
கேள்வி: மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்க சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் தயாரா?
பதில்: முதலில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட தயாராக என்று அவர் தீர்மானிக்கவேண்டும்.
கேள்வி: நுகேகொட கூட்டத்துக்கு அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் மக்கள் சேவைக்கு தயார் என்று குறிப்பிட்டுள்ளாரே?
பதில்: மக்கள் சேவையை பல வழிகளில் முன்னெடுக்கலாம்.
கேள்வி: நேரடியாக அரசியலுக்கு வந்து சேவையாற்றவதற்கு?
பதில்: அவர் ஏற்கனவே அரசியலில் உள்ளார். அவர் சுதந்திரக் கடசியின் காப்பாளர்.
கேள்வி: மஹிந்த ராஜபக்ஷ வேண்டும் என்று பலர் கூறுகின்றனரே? "
பதில்:முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முருங்கை மரத்தில் ஏற்றுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால் மஹிந்த ராஜபக்ஷ முருங்கை மரத்தில் தற்போது ஏறமாட்டார் என்று நம்புகின்றேன். ஆனால் நாங்கள் நல்லாட்சியே நடத்துகின்றோம். குடும்ப ஆட்சி ஊழல் ஆகியவற்றை எதிர்த்தே வெளியில் வந்தோம்.
அப்போது சிலர் என்னிடம் வந்து பேருவளை தொகுதியை வெற்றிபெற முடியாது என்று குறிப்பிட்டனர். ஆனால் எனக்கு மக்களின் போக்கு தெரிந்தது. 2010 ஆம் ஆண்டு 15000 வாக்குகளினால் பேருவளையை மஹிந்த ராஜபக்ஷவுக்காக வெற்றியீட்டிய நான் இம்முறை 15000 வாக்குகளினால் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்தேன் என்றார்.
Source - Virakesary
