ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொண்டு தேசிய அரசாங்கத்தில் இணைந்ததன் மூலம் தமக்கு வாக்களித்த மக்களைக் காட்டிக்கொடுத்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கியதன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் வாலாக மாற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏனைய கட்சிகளின் வாக்குகளினால் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவாகவில்லை. ரணில் விக்கிரமசிங்க, ஆர்.சம்பந்தன், ரவூப் ஹக்கீம், அனுரகுமார திஸாநாயக்க, சம்பிக்க ரணவக்க போன்றவர்களினால் அவர் ஜனாதிபதியானார். இதனால் தன்னை ஜனாதிபதி பதவியில் அமர்த்திய குறிப்பாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு நம்பிக்கையில்லாத் தீர்மானங்களினால் வீழ்த்த முடியாத ஸ்திரமான அரசாங்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் தேவை மைத்திரிபால சிறிசேனவுக்கு இருக்கின்றது.
பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தில் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவிக்குத் தெரிவாகவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை அமைச்சரவைக்குள் கொண்டுவந்து ஏனையோருக்கு இராஜாங்க அமைச்சர் பதவிகளை வழங்கி தேர்தலுக்கு முன்னர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ஏற்படுத்திகொள்ளப்பட்ட நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கப் பார்க்கின்றனர். இதுவே அதன் ஒரே நோக்கம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொண்டுள்ளது. இது மிகவும் ஆச்சரியமான வேலை. அமைச்சுப் பதவிகளை, எதிர்கட்சித் தலைவர் பதவியை தம்மிடம் வைத்துக்கொண்டு அரசாங்கத்தையும் எதிர்கட்சியையும் தன்வசம் வைத்துக்கொண்டு தம் சொற்படி நடக்கும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளனர்.
இப்படியான நிலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் எப்படி அரசாங்கத்தை விமர்சிப்பார்? அது கண்ணாடிக்கு எதிரில் சென்று தன்னைத் தானே விமர்சிப்பதற்கு ஒப்பானது. அரசாங்கத்தின் ஜனாதிபதியும் அமைச்சர்களும் தமது கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கும்போது எப்படி அரசாங்கத்தை விமர்சிக்க முடியும் எனவும் விமல் வீரவன்ஸ கேள்வி எழுப்பினார்.
Source TL
