இரத்தினபுரி, பெல்மதுளை, கனேகம பிரதேசத்தில் இரு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கணவனும் மனைவியும் பலியாகியுள்ளனர்.
இவர்களது இரு பிள்ளைகள் உட்பட ஏழு பேர் படு காயமடைந்துள்ள அதேவேளை பிரதேச ஊடகவியலாளர் ஒருவரின் கால் முறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதிக்கொண்ட முச்சக்கரவண்டிகளுடன் மேலும் இரண்டு மேட்டார் சைக்கிள்களும் மோதி விபத்துக்குள்ளானதாக காவத்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.15 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டிகள் மோதிக்கொண்டதில் அவற்றில் ஒன்றில் பயணித்த இரத்தினபுரி மல்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் பலியாகியுள்ளனர். இவர்கள் இருவருக்கும் 30 வயதுகள் என அறியப்பட்டுள்ளது. இரு பிள்ளைகளும் படுகாயமடைந்துள்ளனர்.
பெல்மதுளையிலிருந்து பண்டாரகம நோக்கியும் இரத்தினபுரியிலிருந்து பெல்மதுளை நோக்கியும் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டிகளே முதலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதே வேளை இதே பகுதிகளில் வந்த இரு மோட்டார் சைக்கிள்களும் மோதுண்ட முச்சக்கரவண்டிகளில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த பிரதேச ஊடகவியலாளர் ஒருவர் கால் முறிந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
