( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அரசாங்கத்தின் நூறுநாள் வேலைத் திட்டத்தின் கீழ் நிந்தவூர்ப்;; பிரதேசத்திலுள்ள கற்பிணித்தாய்மாருக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும் சத்துணவு வழங்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கடந்த (13) நிந்தவூர் பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம் பெற்றது.
பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி;. பைறூசா நக்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சீ.பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, சத்துணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.அலாவுதீன், பிரதிப் பணிப்பாளர் ஏ.இஸ்ஸதீன், அட்டாளைச்சேனை ஆயூர்வேத ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியேட்சகர் கே.எல்.நக்பர், அபிவிருத்திக் குழுத் தலைவர் எம்.எம்.றகீம் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மொத்தம் 505 தாய்மாருக்கு ஒரு மாதத்திற்கான சத்துணவாக ரூபாய் 2000 பெறுமதியான சத்துணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இன்னும் 09 மாதங்களுக்கு இவ்வாறான பொதிகள் வழங்கி வைக்கப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் இங்கு உரையாற்றுகையில்:- 'இந்தநாட்டில் வாழும் கற்பிணித் தாய்மார்கள் போசாக்கின்மையால் படும் கஷ்டங்களையும், துன்பங்களையும் அறிந்து கொண்ட இந்த அரசாங்கம் இதனைப் போக்குவதற்காகவே கற்பிணித் தாய்மாருக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும் போசாக்கான உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, வெற்றிகரமாகச் செயற்படுத்தி வருகின்றது' எனத் தெரிவித்தார்.