Featured Home (TOP)

Recent Comments

Thursday, May 7, 2015

Unknown

"தேர்தல்முறை திருத்த விடயத்தில் காட்டப்படும் அவசரத்தின் பின்னால் கபடத்தனமான இனவாத நோக்கமும் இருக்கின்றது": பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்



(ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி)



'மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்ட நோக்கங்களுக்காகவே தேர்தல் திருத்தம் மேற் கொள்ளப்பட வேண்டும். ஆனால் அதனைச் செய்வதற்கு சில தரப்பினர் காட்டும் அவசரத்தைப் பார்க்கும்போது அதன் பின்னால் சிறு பான்மை மக்களுக்கு எதிரான கபடத்தனமான இனவாத நோக்கங்களும் இருப்பதாகவே தெரிகின்றது' என NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கடந்த 3 ஆம் திகதி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) மூதூரில் நடாத்திய நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தர்.


NFGG யின் மூதூர் பிராந்திய செயற்குழுவின் தலைவர் Dr. ஷாஹிர் மற்றும் NFGG யின் பொதுச் செயலாளர் MR.நஜா முஹம்மட் உட்பட தொழிலாளர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது:

'ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து இந்நாட்டில் அரசியல் பரபரப்புக்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. 19ஆவது திருத்த சட்டம் என்ற அரசியல் பரபரப்பு நிலைமை பல தாமதங்களுக்குப் பிறகு இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. அடுத்த அரசியல் பரபரப்பாக 20 ஆவது யாப்புத் திருத்தம் எனப்படும் தேர்தல் முறை திருத்தம் இப்போது பேசப்பட தொடங்கியிருக்கிறது.

தேர்தல் திருத்தம் தொடர்பில், வித்தியாசம் வித்தியாசமான யோசனைகள் பல முன்வைக்கப்பட்டும் வருகின்றன. மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டே இந்தத் திருத்தங்கள் அவசியப்படுகின்றன என்றும் சொல்லப்படுகிறது. தற்போது நடை முறையிலுள்ள விகிதாசார தேர்தல் முறையில் காணப்படும் விருப்பு வாக்கு முறைமையானது கட்டுக்கடங்காத தேர்தல் பிரச்சார செலவுகளை ஏற்படுத்தி பல்வேறு தேர்தல் வன்முறைகளுக்கு காரணமாகவும் அமைகிறது. அத்தோடு மாவட்ட மட்டத்திலேயே பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதனால் ஒவ்வொரு மாவட்டத்திற்குள்ளும் காணப்படும் தொகுதி மக்களின் நலன்களுக்குப் பொறுப்புச் சொல்லக்கூடிய வகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இல்லை என்ற நிலையும் காணப்படுகிறது.

எனவேதான், விருப்பு வாக்கு முறையினை இல்லாதொழித்து தொகுதிகளுக்கு பொறுப்புச் சொல்லக்கூடிய வகையில் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யக் கூடியதாக பாராளுமன்றத் தேர்தல் முறை அமைய வேண்டும் என்ற நியாயத்தின் அடிப்படையிலேயே தேர்தல் திருத்தம் ஒன்றை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

ஆனால், அவ்வாறான திருத்தம் ஒன்று செய்யப்படும் போது சிறுபான்மை சமூகங்களுக்கு கிடைக்க வேண்டிய நியயமான பிரதிநிதித்துவங்களை உறுதி செய்வதாக அது அமைதல் வேண்டும். அதற்குப் போதிய கால அவகாசமும் எடுத்து விரிவான கலந்துரையாடல்களும் அவசியமாகும். தேர்தல் தொகுதிகளின் எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வதென்பது சிறுபான்மை மக்களைப் பொறுத்த வரையில் பாரதூரமான விடயமாகும். இது மிக நிதானமாகவும், நுணுக்கமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது இந்த விடயங்கள் பேசப்பட்ட சந்தர்பப்த்தில் நாம் முன்கூட்டியே இது தொடர்பிலான எமது கோரிக்கைகளை தற்போதைய ஜனாதிபதி அவர்களிடமும், பிரதமரிடமும் முன்வைத்திருந்தோம். ஆனாலும், இந்தத் திருத்தத்தைக் கொண்டுவருவதில் SLFP அணியினர் காட்டுகின்ற அவசரத்தைப் பார்க்கின்றபோது இதற்குப் பின்னால் இரண்டு வகையான கபடத்தனமான நோக்கங்கள் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அதிலொன்று அரசியல் ரீதியான கபடத்தனமான நோக்கமாகும். விகிதாசார தேர்தல் முறை ஒன்றின்படி தேர்தலை நடாத்தி ஐக்கிய தேசியக் கட்சி அதிக ஆசனங்களைப் பெறுவதற்கு சந்தர்ப்பம் கொடுத்து விடக்கூடாது என்பதுவே கபடத்தனமான அந்ந நோக்கமாகும்.

இரண்டாவதாக, இனவாத நோக்கமொன்றும் இருப்பதனைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதாவது சிறுபான்மை சமூகங்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவங்களை ஓரளவு உத்தரவாதப்படுத்தி வரும் விகதாசார முறையினை மாற்றியமைப்பதன் மூலம் சிறுபான்மை மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவப் பலத்தினைக் குறைக்க வேண்டும் எனச் சிலர் விரும்புகின்றனர். அதுதான், தேர்தல் திருத்த விடயத்தில் காட்டப்படும் இந்த அவசரத்தின் பின்னால் இருக்கும் கபடத்தனமான இனவாத நோக்கமாகும்.

மக்களுக்கும், நாட்டுக்கும் நன்மை பயக்கக் கூடிய எந்தவொரு மாற்றத்தினையும் நாம் வரவேற்கிறோம். ஆனால், பெரும்பான்மை சமூகம் மாத்திரம் நன்மையடைந்து சிறுபான்மை சமூகங்களின் தலையில் விழுகின்ற அடியாக இந்தத் தேர்தல் முறை மாற்றம் அமைவதனை அனுமதிக்கமுடியாது.

சிறுபான்மை மக்களின் நியாயமான அபிலாசைகளை புறந்தள்ளி பெரும் பான்மை சமூகத்தின் அரசியல் மேலாதிக்கத்தினை நிறுவ முற்பட்டதன் விழைவுகளை கடந்த 30 வருடங்களுக்கு மேல் நாம் அனுபவித்திருக்கிறோம். அந்தத் தவறு மீண்டும் ஒரு முறை இந்த நாட்டில் நடந்து விடக்கூடாது.

தேர்தல் திருத்தம் என்பது அத்தனை அவசரமாக செய்யப்படவேண்டிய ஒரு தேசிய விவகாரமும் கிடையாது.

நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பெரும்பாண்மை மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் தேர்தல்முறை மாற்றம் ஒன்றினை சில தரப்பினர் அவசர அவசரமாக திணிக்க முற்பட்டால் அது மற்றுமொரு சாபக்கேடாகவே இந்நாட்டில் அமையும்.

எனவே, சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகள் ஒற்றுமையோடும் கவனமாகவும் புத்தி சாலத்தனமாகவும் இந்த விடயத்தை அணுகுவதன் மூலம் எமது எதிர்கால அரசியல் நலன்களை உத்தரவாதப்படுத்த முடியும்."

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :