(புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)
மட்டக்களப்பு மாவட்டம், ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலமுனைக் கிராமத்திற்கு மேலதிக கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளை ஏற்படுத்துமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இக்கிராமமானது 1990 காலப்பகுதிக்குப் பின்னர் இரண்டு கிராம சேவகர் பிரிவாகக் காணப்பட்ட போதிலும் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் இது ஒரு கிராம சேவகர் பிரிவாக மாற்றப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் 08ம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ தலைமையிலான புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின், இக்கிராமத்தில் அதிகரித்திருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் தற்போது அமுலிலுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பவற்றை காத்தான்குடிப் பிரதேச ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரான எச்.எம்.எம். முஸ்தபா பிரதமர் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மைக்கல் பெரேரா ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு சென்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை அதிகரிக்குமாறு கோரிக்கை வடுத்திருந்தார்.
இதனையடுத்து பிரதமர் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஆகியோரின் பரிந்துரைக்கமய சுமார் 2270 குடும்பங்களை உள்ளடக்கியதாகவும், இரண்டு வட்டாரங்களைக் கொண்டதாகவும் காணப்பட்ட இக்கிராமத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூன்று கிராம சேவகர் பிரிவுகளாக வகுக்குமாறு 2015.03.10 திகதியன்று உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பொரலஸ்ஸ, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரைப் பணித்துள்ளார்.
இப்பணிப்புரையின் பிரதி காத்தான்குடிப் பிரதேச ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் எச்.எம்.எம். முஸ்தபாவுக்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பொரலஸ்ஸவினால்; 2015.03.10 திகதியன்று அனுப்பி வைக்கப்பட்டதற்கு அமைவாக பாலமுனைக் கிராமத்தில் அகற்கான வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு உரிய அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து பாலமுனை கிராம மக்கள் காத்தான்குடி ஜக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் எச்.எம்.எம். முஸ்தபாவுக்கும், தற்போதய அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
கடந்த அரசாங்கத்தின் எந்தவொரு மக்கள் பிரதிநிதியாலும் கவனத்திற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிராத இத்தேவையினை ஜக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி அமைப்பாளர் எச்.எம்.எம். முஸ்தபா கவனத்திற்கெடுத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டிருப்பதானது பல தசாப்த வரலாறுகளைக் கொண்ட அரசியல் ஜாம்பவான்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருப்பதாக பிரதேச மக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
