பெண்களை சீதனக் கொடுமையிலிருந்து மீட்க வேண்டும் என பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான திருமதி சல்மா ஹம்ஸா தெரிவித்தார்.
சீதனம் சீர்திருத்தப்படல் வேண்டும் எனும் தலைப்பிலான கலந்துரையாடலொன்று (15.6.2015)காத்தான்குடியிலுள்ள பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஜம் இய்யத்துஸ் ஸபாப் நிறுவனத்தின் அனுசரணையுடன் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் ஜம் இய்யத்துஸ்ஸபாப் நிறுவனத்தின் பணிப்பாளரும், அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் உப செயலாளருமான மௌலவி எம்.எஸ்.எம்.தாஸீம் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் முஸ்லிம் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த திருமதி சல்மா ஹம்ஸா சீதனம் என்பது வறுமையான பெண்களை வதைக்கும் ஒரு நடவடிக்கையாகும். இன்று சமூகத்திலே சீதனக் கொடுமையினால் திருமணம் செய்து கொள்வதற்கான வயதாகியும் சீதனம் கொடுப்பதற்கு தம்மிடம் வசதி வாய்ப்பு இல்லை என்பதற்காக திருமணம் செய்யாமல் வீட்டின் மூலைக்குள் முனங்கிக்கிடக்கும் பல வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை நாங்கள் இன்று பார்க்கின்றோம்.
திருமணம் செய்து கொள்வதற்காக வீடொன்றை நிர்மானிப்பதற்கு பல வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் வெளிநாடு சென்று மிகவும் கஸ்டத்திற்குள் நிர்க்கதியான நிலைக்குள் தள்ளப்படுவதையும் நாங்கள் பார்க்கின்றோம்.
இந்த நிலை மாற வேண்டும் ஆண்கள் வீடுகட்டி பெண்களை எடுத்து திருமணம் செய்ய வேண்டும். சீதனம் சீர்திருத்தப்படல் வேண்டும் என்றார்.
ஜம் இய்யத்துஸ் ஸபாப் நிறுவனத்தின் அனுசரணையுடன் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் சீதனத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள் அதனால் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றி விழிப்புனர்வு வேலைத்திட்டத்தினை சமூக மட்டத்தில் மேற் கொள்வதென இந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதாகவும் திருமதி சல்மா ஹம்ஸா மேலும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் தொழிலின்றி காணப்படும் ஆண்களுக்கு தொழில் வழிகாட்டுதல், சீதனமின்றி பெண்களை திருமணம் செய்வதற்காக முன்வரும் ஆண்களை அதற்காக ஊக்குவித்தல் போன்ற செயற்திட்டங்களையும் மேற் கொள்ள நடவடிக்கை எடுப்பதெனவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டதாக திருமதி சல்மா ஹம்ஸா மேலும் குறிப்பிட்டார்.



