Featured Home (TOP)

Recent Comments

Wednesday, June 10, 2015

Unknown

பச்சை மழைக் கிராமம்

(-எம்.எல்.எம்.அன்ஸார்.)

இதயம் தேடிக் கண்டுபிடித்த இன்பம்
இதுதான் சோக்கான சுகம்
---
பயண பாதி வேளையில் தரிக்கிறேன் !
கண்களின் மீது வரையப்பட்ட குளிர் ஓவியங்களென
தாவரங்கள் கூத்தாடிக் குதூகலிக்கின்றன.
வட்ட வீட்டில் குளமொன்று
தன்னந்தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது !
சொண்டு முளைத்த தேவதைகளான கொக்குகள்
காவலுக்கு நிற்பதைக் காணுகிறேன்
---
பச்சை நிறத்தில் மழை பெய்து
ஓய்ந்திருக்குமோ இக் கன்னடக் கிராமத்தில்?
விழி அகலும் வழி முழுதும்
நெல் வயலும் புல் நிலமும்.
வெறுங்காலால் நடந்தே விருப்பங்களை
கண்களால் சூப்பித் தின்கின்றேன்
---
நான் தேடும் அமைதியை அள்ளிக் கொட்டவென்றே
இவ்வொற்றை மாமரம்
நிழலை விரித்து நிலத்தில் வைத்திருக்கிறது .
கல்லெறி விழுந்து காயம் வந்துவிடுமென்ற
அவமானத்திற்குப் பயந்தா
கனிகளும் காய்களுமாக
தூக்குப் போட்டுத் தொங்குகின்றன என்று
கற்பனை எண்ணிப் பார்க்கின்றேன்
---
இம்மாதிரி
குளத்தில் தூசு கழுவிக் குளித்து
மரக் கிளைகளில் தலை துவட்டி வரும்
வெள்ளைக் காற்றை
சுவாசித்து விழுங்கிய நாட்கள் நினைவில்லை
---
நிற்பதற்குத் தயாராகிவிட்ட புகையிரதம் போல
வலது பக்க கிறவள் வீதியைக் கடந்து
மெதுவாக நடந்து போகிறது சிற்றோடை !
பிரயாணிகளாகப்  பயணிக்கின்ற மீன் குஞ்சுகள்
கையசைத்து தம் இன்பத்தை துள்ளிக் காட்டுகின்றன
---
நான் புறப்பட்டுப் போக வேண்டும்
இறக்கிவைத்த மனசை மீளப் பொருத்தும்
ஆற்றல் அறவே இல்லை.
இழப்பொன்று நிகழ்ந்து விட்டது மட்டும்
காய்ச்சல் காயத் தொடங்குகிறது.
வாசலுக்கு வந்து வழியனுப்பும் புதுப் பொண்டாட்டி போல
பாதையோர காட்டுப் பூக்கள்
ஆசீர்வதித்து அனுப்பி வைக்கின்றன

04-04-2014


 

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :