திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குரிய சட்ட ரீதியான தகைமையை தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் கொண்டிருக்கவில்லை எனக் குறிப்பிட்டு நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சம்மாந்துறையைச் சேர்ந்த சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா என்பவர் சார்பில் சட்டத்தரணி ஆனந்த குலவன்சவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் தேர்தல் ஆணையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர், கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில், சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அரசியல் யாப்பின் படியும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதிகளின் படியும் தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகைமையைக் கொண்டிருக்கவில்லை எனும் வாதத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னராக தனது பதவியை இராஜினாமாச் செய்திருக்க வேண்டும்.
அவ்வாறன்றி அவர் விடுமுறை எடுத்துவிட்டே தேர்தலில் போட்டியிடுகிறார்.
இது சட்டத்துக்கு முரணானதாகும். அந்த வகையில் அவர் போட்டியிடுவதை சட்டத்துக்கு முரணானது எனப் பிரகடனப்படுத்துமாறும் அவர் தேர்தலில் வெற்றி பெற்றாலும் பாராளுமன்றம் செல்வதற்கு தகுதி பெறமாட்டார் என்பதைப் பிரகடனப்படுத்துமாறும் இந்த மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது.
தென் கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் இம் முறை பொதுத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகிறார்.
கடந்த திங்கட்கிழமை சம்மாந்துறையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், முன்னாள் உபவேந்தர் தேர்தலில் வெற்றியீட்டினாலும் அவரால் சட்ட ரீதியாகப் பாராளுமன்றம் செல்ல முடியாது என்றும் அவர் பாராளுமன்றம் சென்றால் காதை அறுத்துத் தருவேன் என்றும் சவால் விட்டிருந்தார்.
இந் நிலையிலேயே நேற்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
