வடக்கில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்ற போதிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை வீழ்த்துவதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸை ரிஷாட் பதியுதீன் அம்பாறை மாவட்டத்திற்கு கொண்டுவந்திருக்கின்றார்.
அவரது பிரதேசத்தில் மு.கா தனித்துப் போட்டியிடுவதால் மு.காவை வீழ்த்தும் முயற்சியில் இங்கே மக்கள் காங்கிரஸை விஸ்தரித்திருக்கின்றார்.
இதனால் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தின் வாக்குகள் சிதறடிக்கப்படுகின்றன என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள துறைசார்ந்த முக்கியஸ்தர்களை ஒன்றிணைத்து ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் நடவடிக்கைகள் பற்றிய கலந்துரையாடல் கடந்த புதன்கிழமை அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், முன்னாள் பிரதி அமைச்சர் அமீர் அலியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடுகின்றது.
அதேபோல் ரிஷாட் பதியுதீனின் பிரதேசத்தில் மு.கா தனித்துப் போட்டியிடுவதால் அம்பாறையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகின்றது.
இவ்வாறு அரசியல் ரீதியாக இக்கட்சியினர் பழிவாங்கல் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்களே தவிர அவரவர் கட்சிகளில் பிரதிநிதிகளை அதிகமாகப் பெறவேண்டும் என அவர்கள் முயற்சிக்கவில்லை.
வெற்றிலை என்பது மஹிந்த ராஜபக்ஷவிற்கு மட்டும் சொந்தமான ஒரு சின்னமல்ல. அது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கான பொதுவான சின்னம்.
சிலர் சொல்வதைப்போல் மஹிந்த அணியில் வெற்றிலைச்சின்னத்தில் நான் போட்டியிடவில்லை
தேசிய காங்கிரஸ் சார்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலே நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன்.
கடந்த முப்பது ஆண்டுகளாக நமது மக்களுக்கு நடந்த கொடுமை, நாம் எங்குமே வாழ முடியாத சூழ்நிலை, எமது உரிமைகள் சொத்துக்கள் என்பன சூறையாடப்பட்டமை இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டே நான் எம்மை நிம்மதியாக வாழ்வதற்கான சூழ்நிலையினைத் தோற்றுவித்த மஹிந்த ராஜபக்ஷவின் பக்கம் இருந்தோம்.
அமைச்சுப் பதவி பெறுவதற்காகவோ, வர்த்தக நடவடிக்கைகளுக்காகவோ அல்லது தனிப்பட்ட சுயநலத்திற்காகவோ நாம் அவர் பக்கம் செல்லவில்லை. அதற்காக நாம் தொடர்ந்தும் மஹிந்தவின் பக்கம் நிற்க வேண்டும் என்பது கட்டாயமானதல்ல. அவ்வாறானதொரு தேவை எமக்கு எப்போதும் இருந்தது கிடையாது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மஹிந்த அணியென்றும் மைத்திரி அணி என்றும் இரண்டு கூறுகளாகப் பிரிந்து விட்டால் அந்த இடைவெளிக்குள் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைப்பதற்கான நிலைமையை தோற்றுவிக்கக் கூடும் என்பதற்காகவே நாம் இரு தரப்பினரையும் ஒற்றுமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டோம்.
இம்முறை நடைபெறவுள்ள தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைக்கக் கூடாது என்பதற்காகவே நாம் பல்வேறான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம்.
மாறாக ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி பீடம் ஏறினால் வடக்கு கிழக்கு இணைப்பு சம்பந்தமான பிரச்சினை இருக்கிறது, புலிகளின் வருகை, பொருளாதாரப் பின்னடைவு, முஸ்லிம் மக்களுக்குப் பிரச்சினை, அபிவிருத்தி அழிந்து போகும் நிலைமை போன்ற பல்வேறான பிரச்சினைகள் நாட்டில் தலைதூக்கும்.
இதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி பீடம் ஏறக்கூடாதென்ற நிலைப்பாட்டில் நின்றுகொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கூறு போடப்படாமல் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் செயற்பட்டு வருகின்றோம். இதற்காக நான் மஹிந்தவின் அணி என்பது கேலியான விடயமாகும்.
தற்போதைய நாட்டின் நிலவரப்படி நாடு தழுவிய ரீதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலின்போது அமோக வாக்குகளைப் பெற்று வெற்றியடையவுள்ளது.
நாடு முழுவதிலுமுள்ள சிங்கள மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை ஆதரிக்கின்றார்கள்.
நாட்டிலுள்ள சிறு தொகை சிங்கள மக்களும் வட கிழக்கில் உள்ள சில குழுவினருமே ஐக்கிய தேசியக் கட்சியினை ஆதரிக்கின்றார்கள்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது அனைத்துக் கட்சிகளும் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் அன்னச் சின்னத்திற்கு 2 இலட்சத்து 33 ஆயிரம் வாக்குகளை அளித்தனர்.
வெற்றிலைச் சின்னத்திற்கு 1 இலட்சத்து 21 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. அந்தத் தேர்தலில் அன்னச் சின்னத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் இம்முறை சுமார் 65 ஆயிரம் வாக்குகள் தமிழ் மக்கள் பக்கம் சென்று விடும்.
மக்கள் விடுதலை முன்னணி, பொன்சேகா அணி, தேசிய காங்கிரஸ் என்று பல்வேறான பிரிவுகளில் இம்முறை வாக்குகள் செல்லவுள்ளன.
அம்பாறை மாவட்டத்தின் தற்போதைய நிலவரத்தின்படி ஒரு இலட்சத்து 10 ஆயிரம் வாக்குகளையே ஐக்கிய தேசிக் கட்சி பெற்றுக் கொள்ளும்.
ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்றுக் கொள்ளவுள்ளது.
இதனடிப்படையில் இம்மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நான்கு ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு ஆசனங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு ஆசனத்தையும் பெற்றுக் கொள்ளும்.
இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் எமது தேசிய காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும் என சிலர் விரும்பியபோதிலும் எமக்காக அளிக்கப்படவுள்ள சுமார் 70 ஆயிரம் வாக்குகளைக் கொண்டு ஒரே ஒரு பிரதிநிதியைத் தான் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலைப்பாட்டில்தான் நாம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு மூன்று பிரதிநிதிகளை வெற்றி பெறும் முனைப்புடனே களத்தில் இறங்கினோம்.
அம்பாறை மாவட்டத்தில் நீண்ட காலமாக அரசியல் அதிகாரமற்று அரசியல்வாதிகளால் புறக்கணிக்கப்பட்டு வந்த பொத்துவில் மற்றும் இறக்காமம் போன்ற பிரதேசங்களுக்கு அரசியல் அதிகாரங்களை வழங்கும் வகையிலேயே இப்பிரதேசங்களிலிருந்து வேட்பாளர்களை களமிறக்கி பல்வேறான வெற்றி வியூகங்களுடன் செயற்பட்டு வருகின்றோம். இச்சந்தர்ப்பத்தில் நம்மவர்கள் எதிர்கட்சிக்காரர்களின் பொய்ப் பிரச்சாரங்களை நம்பி விடாமல் ஒற்றுமையுடன் செயற்பட்டு நமது வெற்றியினை உறுதிப்படுத்த முயல வேண்டும்.
நாட்டில் நடைபெறும் ஏனைய தேர்தல்தல்களைப் போல் பாராளுமன்றத் தேர்தலினை மட்டிட முடியாது. நமது பிரதேசத்திற்கு நமது மாவட்டத்திற்கு யார் பொருத்தமானவர் யார் சேவை செய்யக்கூடியவர் என்பதனைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டிய தேர்தல் இதுவாகும்.
கடந்த காலங்களில் நாம் நியாயமான முறையிலே மக்களுக்காக செயற்பட்டிருக்கின்றோம்.
நாம் நேர் வழியில் நடந்து கொண்டதால் இந்த நாட்டில் பாரிய அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றோம்.
இந்த நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என்கின்ற திடமான நிலைப்பாட்டில் எமது தேசிய காங்கிரஸ் உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க இருக்கும் வரை அக்கட்சியில் இணைவதில்லை என மறைந்த எமது தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் ஒரு கொள்கையுடன் செயற்பட்டார்.
அவர் வழியில் அவர் பாசறையில் அரசியல் செய்யும் நாம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க இருப்பாராயின் எதிர்த்தே செயற்படுவோம். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக வேறொருவர் வருமிடத்து நாம் ஐக்கிய தேசியக் கட்சியினை எதிர்க்க வேண்டிய தேவை ஏற்பாடாது.
விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட எமது மக்களைக் குடியேற்றுவதற்காக கடந்த மஹிந்த ஆட்சியில் மக்கள் குடியேற்றத்திற்காக வழங்கப்பட்ட வில்பத்துக்காட்டினை இந்த அரசாங்கத்தினாலும் ரணில் விக்ரமசிங்கவினாலும் காடழிப்பதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என பலமாக குரல் கொடுக்கப்படுகின்றது. முஸ்லிம் மக்கள் தமக்குச் சொந்தமானது என்று நினைக்கின்ற சில விடயங்களைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலை தற்போது ஏற்பட்டிருக்கின்றது.
எமது தேசிய காங்கிரஸ் கட்சி காலத்திற்குக் காலம் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மாறிவிடும் கட்சியல்ல. திடமான நிலைப் பாட்டுடன் நேர்வழியில் செயற்பட்டு வருவதால் எமக்கென்று நற்பெயர் எப்போது முண்டு.
காலத்திற்குக் காலம் அவசர முடிவுகளை எடுத்து மாறுகின்ற வர்கள் அரசியலில் நின்றுபிடிக்க முடியாமல் அழிந்து போய்விடு வார்கள் என்றார்.
