Featured Home (TOP)

Recent Comments

Tuesday, July 21, 2015

Unknown

சக வேட்பாளர்களின் மானம், மரியாதையில் கை வைத்து விமர்சிக்காதீர்கள்: காத்தான்குடியில் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)

ஒரு முஸ்லிமுடைய மானம், மரியாதையில் கைவைப்பது, அவரை இழிவுபடுத்துவது, அவதூறு கூறி அநியாயமாக விமர்சிப்பது போன்ற இழி செயல்களை நாம் பின்பற்றுகின்ற இஸ்லாம் மார்க்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. இதன் காரணமாகவே இன்று முற்பகல் எனது பேச்சாளர்களையும், ஆதரவாளர்களையும் நான் எனது அலுவலகத்திற்கு வரவழைத்து மிகவும் நாகரீகமாக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் தலைமை வேட்பாளராகப் போட்டியிடுபவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஐ.ம.சு.கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரச்சாரக்கூட்டம் கடந்த 20ம் திகதி திங்கட்கிழமை மாலை காத்தான்குடி குட்வின் சதுக்கத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உரையாற்றத் தொடங்கியபோது மேற்கண்டவாறு அவர் தெரிவித்திருந்த போதிலும், அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸில் அவரை எதிர்த்துப் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை மிகவும் மோசமான வார்த்தைகளால் அவர் தாக்கிப் பேசினார்.

ஒரு கட்டத்தில் அவரது முன்னாள் அரசியல் விசுவாசியாகவும், இறையச்சமிக்க 'தஃவாதாரி' என காத்தான்குடியில் அவரால் பகிரங்கமாகப் போற்றப்பட்டவருமான இந்நாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கை மறைமுகமாக (மென்டல்) ஒரு பைத்தியம் என்றும் அவர் இழித்துரைத்தார்.

ஸ்ரீ.ல.மு.காங்கிரஸுடன் இத்தேர்தலில் கூட்டுச் சேர்ந்து தனக்கு மிகப்பெரும் சவாலாக இம்மாவட்டத் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்ற நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மானையும் அவர் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்துப் பேசியதுடன், இத்தேர்தல் முடிவுகள் வெளியானதுடன் அவரையும், இவ்வூரிலுள்ள நல்லாட்சிக்காரர்களையும் இந்த ஊரை விட்டே ஓட வைக்க வேண்டும் எனவும் அவர் பகிரங்க எச்சரிப்புடன் கேட்டுக் கொண்டார்.

முஸ்லிமுடைய மானம், மரியாதை குறித்து முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா நேற்றைய தினம் உரையாற்றிய அதே இடத்தில் நின்றுதான், கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற காத்தான்குடி நகர சபைக்கான முதலாவது தேர்தல் பிரச்சாரத்தின்போதும் அவர் உள்ளுர் பத்திரிகை ஆசிரியர் ஒருவரை உலமாக்களையும் மேடையில் வைத்துக் கொண்டு மிகக் கேவலமாக இழிவுபடுத்திப் பேசியதையும், அந்த ஊடகவியலாளரை நேரடியாகத் தாக்குமாறும் ஆக்ரோஷமாகப் பேசியதை இக்கூட்டத்திற்குச் சமூகமளித்திருந்த பலரும் இத்தருணத்தில் நினைவுபடுத்திப் பேசிக் கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.

அவரது பேச்சின் ஆரம்பத்தில், வேட்புமனுவைத் தாக்கல் செய்த அன்றைய தினமே ஐ.ம.சு. கூட்டமைப்பினது ஆசனமும், தனது வெற்றியும் உறுதிப்படுத்தப்பட்டு விட்டதாகத் தெரிவித்து, தனது கடந்த காலத் தேர்தல் வரலாறுகள் எவற்றிலும் இவ்வாறான ஒரு இலகுவான வெற்றியை இறைவன் ஒரு போதும் தந்ததே இல்லை என்றும் புளகாங்கிதமாகக் கூறினார்.

எனினும், அவரது பிந்திய உரையின்போது, 27,000 விருப்பு வாக்குகளைப் பெற்றும் கூட தன்னால் ஒரு தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்றும், அதனால் இந்தத் தேர்தலில் தனது வெற்றி இலக்கை அடைய 28,000 விருப்பு வாக்குகள் தேவைப்படும் என்றும், காத்தான்குடி முஸ்லிம்கள் மட்டுமல்ல, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் வாக்காளர்களின் வாக்குகளும் தனது வெற்றிக்குத் தேவை எனக் கூறியபோது, முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் அவரது உரை குறித்து அவரது தீவிர ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் முகஞ்சுளித்துக் கொண்டனர்.

வேட்புமனுத் தாக்கல் தினத்தில் தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டதாகக் குறிப்பிட்ட முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, பின்னர் இவ்வாறு 28,000 விருப்பு வாக்குகளின் தேவை பற்றியும், தமிழ் மக்களின் வாக்குகளையும் பெறுவதற்காகவே முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதந்தாங்கிய முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்ட முன்னாள் பயங்கரவாதி பிள்ளையான்) போன்றவர்களையும் தான் ஐ.ம.சு.கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் சேர்த்துக் கொண்டுள்ளதாகவும் கூறியதானது, அங்கு சமூகமளித்திருந்த முஸ்லிம் பொதுமக்களை சஞ்சலத்திற்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.

எதிரணியினரின் பிரச்சாரத்தின்படி வெற்றிலைக்கு அளிக்கப்படும் வாக்குகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்யும் என்பதை வெகுவாக மறுத்துப் பேசிய முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, அவ்வாறு அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்றால் காத்தான்குடியில் இருப்பவர்கள் குருணாகலைக்குச் சென்றே வெற்றிலைக்கும், மகிந்த ராஜபக்ஷவின் விருப்பு இலக்கத்திற்கும் வாக்களிக்க வேண்டும் என்றும் விளக்கம் கூறினார்.

அவரது இந்த விளக்கத்தைக் கேட்ட வர்த்தகர் ஒருவர், இங்கே நாம் வெற்றிலைச் சின்னத்திற்கு அளிக்கும் வாக்குகளின் மூலமாக ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேசியப்பட்டியலிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் உறவுக்காரர்களும் எம்.பி.யாகி விட வாய்ப்பு ஏற்படும்தானே? என எதிர்க்கேள்வி எழுப்பியது பலரையும் சிந்திக்கத் தூண்டியது.

தான் இத்தேர்தலில் தோல்வியடைந்து, தமிழர் ஒருவர் ஐ.ம.சு. கூட்டமைப்பின் சார்பில் எம்.பி.யானாலும்கூட, தன்னையும் எம்.பி. ஆக்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களுடன் தான் தெளிவான ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருப்பதாகவும் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தனதுரையில் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டார். எனினும் அவ்வாறான ஒப்பந்தம் எதனையும் அவர் சமூகமளித்தவர்களின் முன்னால் எடுத்துக் காட்டவில்லை. இதுவும் அவரது வழமையான தேர்தல் பிரச்சார புருடாவில் ஒன்றாக இருக்கும் என மக்கள் அபிப்பிராயம் தெரிவித்தனர்.


Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :