"நான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் எவ்வித தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை. நான் தற்பொழுது மைத்திரி அணியில்தான் இருக்கிறேன் என முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புள்ளாஹ் இப்பொழுது கூறிவருகின்றார். இது மீண்டும் மக்களை ஏமாற்றுவதற்காக அவர் சொல்கின்ற மிக அப்பட்டமான பொய். அவர் இப்பொழுதும் மஹிந்த அணியில்தான் தேர்தல் கேட்கின்றார் என்பதற்கு பல தெட்டத்தெளிவான ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன. இது தொடர்பில் மக்கள் தெளிவாக இருக்கவேண்டும்" என மட்டக்களப்பு மாவட்டத்தில் SLMC-NFGG கூட்டணியில் மரச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
நேற்று (14.7.2015) காத்தான்குடியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் (NFGG) நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
"கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாட்டிலுள்ள ஒட்டு மொத்த முஸ்லிம்களும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியினை நிராகரித்த போது, ஹிஸ்புல்லாஹ் மாத்திரம் மஹிந்த அணியினை ஆதரித்தார் என்பது நமக்குத்தெரியும். எனினும் தேர்தலுக்குப் பின்னர் மக்கள் ஆணையினை ஏற்றுக்கொண்டு புதிய அரசாங்கத்திற்கு இவர் ஒத்துழைப்பாக இருந்தாரா என்றால் கடைசி வரை கிடையாது. அதில் ஒன்றுதான் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான ஊழல் விசாரணை முன்னெடுக்கப்பட்ட பொழுது இவர் பாராளுமன்றத்தில் உட்கார்ந்து அவருக்கு ஆதரவாக போராட்டங்களை முன்னெடுத்தார்.
அதே போன்றுதான் இந்த நாட்டிலே யுத்த வெற்றி தினத்தினை நினைவுகூர்வதற்காக மஹிந்தவினால் ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. ஜனாதிபதி மைத்திரியினால் மற்றுமொரு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஹிஸ்புள்ளாஹ் எங்கு கலந்து கொண்டார் என்று பார்த்தால், மஹிந்த ஏற்பாடு செய்த நிகழ்விலே கலந்து கொண்டு அவர்களின் மத அனுஷ்டானங்களுக்கேற்ப விளக்குகளை ஏந்தியபடி மஹிந்தவுடன் காட்சி தந்தார்.
இதே போன்று இப்பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளிப்பதற்கு முன்னால் இறுதிக்கட்ட தீர்மானங்களை மேற்கொள்வதற்கான ஒர் கூட்டம், மஹிந்த அணியினால் ஏற்பாடு செய்யப்பட்டு கொழும்பிலே நடைபெற்றது. குறித்த தினம் இவர் சிரி கொத்தாவை நோக்கிச்செல்கின்றாரா? அல்லது மஹிந்த அணியினை நோக்கிச்செல்கின்றாரா? என்று பார்த்தால் மஹிந்த அணியினைச் சேர்ந்த திஸ்ஸ விதாரன, வாசு தேவ நாணயக்கார போன்றவர்களோடு இணைந்து இவர் மஹிந்த அணி நடாத்திய கூட்டத்தில் கலந்து கொள்வதினை நாம் ஊடகங்கள் வாயிலாகப் பார்க்க முடிந்தது. இது தேர்தல் மனு தாக்கல் செய்வதற்கு சில தினங்களுக்கு முன்னால் இடம்பெற்றது. இதன் போதும் இவர் மிகத்தெளிவாக மஹிந்த அணியிலேயே இருக்கிறார்.
இது எல்லாவற்றையும் விட நல்லாட்சியை தோற்கடிப்பதற்கு, அல்லது 62 இலட்சம் மக்கள் வாக்களித்து ஏற்படுத்திய அந்தப் புதிய ஆட்சியினை இல்லாமல் செய்வதற்கு, இவர் துரோகமிழைத்த வரலாறும் ஒன்றிருக்கிறது. அதற்கான ஆதாரமும் எம்மிடமிருக்கிறது. பாராளுமன்றத்திலே மக்கள் ஆணையின் மூலமாக எற்படுத்தப்பட்ட நல்லாட்சிக்குரிய அந்த இடைக்கால அரசாங்கத்தை அழித்தொழிப்பதற்கான, ஒரு பாராளுமன்ற சதியை மஹிந்த ஆதரவு அணியினர் செய்தார்கள். அதுதான் அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையிலே ஹிஸ்புள்ளாஹ் கையெழுத்திட்டிருக்கின்றார். இந்த பிரேரணையை யாருக்கு எதிராக கொண்டு வருகின்றார்கள் என்று பார்த்தால் மைத்திரியின் ஆட்சிக்கு எதிராக, ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையிலான பாராளுமன்றத்திற்கு எதிராக, மஹிந்தவின் வேண்டுகோளுக்காகவே இதனைக் கொண்டு வந்தார்கள்.
இத்தனையையும் செய்து விட்டு மஹிந்த அணியின் வெற்றிலைச் சின்னத்தில் தேர்தலில் நின்று கொண்டுதான் நான் மஹிந்த அணியில் இல்லை என்கிற அப்பட்டமான பொய்யை முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புள்ளாஹ் சொல்கிறார்.
எனவே மக்கள் இவர் விடயத்தில் மிக தெளிவாக இருக்கவேண்டும். கடந்த காலங்களிலும் நாம் இவரது அப்பட்டமான பல பொய்களை மக்களுக்கு தெளிவு படுத்தியிருக்கின்றோம். எனவே இவர் மிகத்தெட்டத்தெளிவாக மஹிந்தவின் அணியில்தான் இருக்கிறார் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். மஹிந்தவிற்கு எதிராக நாம் எவ்வளவு பொறுப்புடன், தேசப்பற்றுடன் வாக்களித்துஅவரை தொற்கடிக்கச் செய்திருந்தோமோ அதே போன்று இந்த வெற்றிலைச் சின்னத்திலே போட்டியிடுகின்றவர்களையும் நாம் தோற்கடிக்காவிட்டால், நாம் மீண்டும் ஒரு இருண்ட யுகத்திற்குள் தள்ளப்படுவோம் என்பதை மக்கள் கவனத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும்."