தேர்தல் சட்டங்களை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 203 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைக்கப்பெற்ற 86 முறைப்பாடுகளுக்கமைய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அத்துடன் மாத்தறை அக்குரஸ்ஸ பகுதியில் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்கள் இருவர் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருக்கும் போது அவ் விடத்திற்கு கெப் வாகனம் ஒன்றில் வந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இவ் இருவரையும் கடத்திச்சென்ற சம்பவம் தொடர்பில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய 06 இளைஞர்கள் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
மட்டக்களப்பில்
இதேவேளை மட்டக்களப்பு காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பகுதிகளில் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் வேட்பாளர்களின் உருவப்படங்களை கொண்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களுக்கான இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் பொதுமக்கள் சிலர் தமது அமைப்புக்கு முறைப்பாடுகளை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இப் பிரதேசங்களில் வீடு வீடாக பிரசாரத்துக்கு செல்லும் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வீட்டு உரிமையாளர்களிடம் அனுமதி பெறாமல் வேட்பாளர்களின் தேர்தல் பிரசார சுவரொட்டிகளை வீட்டுச்சுவர்களில் ஒட்டுவதாகவும் சிலர் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்த அவர் இது தவிர இப்பிரதேசங்களில் பாரிய தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடைபெற்றதாக தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
