தமிழ் மக்களோடு இணைந்து செல்லும் எழுச்சி மிக்க அரசியலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்து வருவதாக அந்தக் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஏறாவூரில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளதாவது, “முஸ்லிம் காங்கிரஸின் அரசியலில் புதிய யுகம் பிறந்திருக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக சகோதர தமிழ் சமூகத்தோடு முரண்பாட்டு அரசியலைச் செய்யாமல் கைகோர்த்துக் கொண்டு போகின்ற எழுச்சி பெற்ற வியூகமாக அது இருக்கும்.
சரித்திரத்திலே அதிகாரத்தில் பங்கெடுக்காமல் இதுவரை ஒதுங்கி தங்களுடைய அரசியலை தனியே செய்து கொண்டிருந்த தமிழ் அரசியல் தரப்பினரை கிழக்கில் ஆளும் அதிகார வர்க்கமாக மாற்றிக்காட்டிய பெருமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு உண்டு.
இந்தத் தேர்தலின் மூலம் கடந்த 10- 12 வருடகாலமாக முஸ்லிம் சமூகத்திற்கு இருந்து வந்த இருண்ட யுகம் இல்லாமலாகிவிடும். நாட்டுப் பற்று என்ற போர்வையில் போலித்தனமாக முழு சர்வதேசத்தையும் பகைத்துக் கொள்ளுகின்ற ஒரு வெளிநாட்டுக் கொள்கையைத்தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடைப்பிடித்தார். வெளிநாட்டு முதலீடுகளை எல்லாம் தடுக்கின்ற ஒரு விதமான குருட்டு ராஜதந்திரத்தை கைக்கொண்ட ஆட்சியாளர்களை நாங்கள் விரட்டியடித்திருக்கின்றோம்.” என்றுள்ளார்.
