கிழக்கு மாகாண சபையில் அமைச்சர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருந்தவர்கள் ஐந்து பேர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுச் சென்றுள்ளமைக்காக அவர்களுக்கு கிழக்கு மாகாண சபையில் நேற்று வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சபை அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30மணிக்கு பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தலைமையில் ஆரம்பமானது.
நேற்றைய சபை அமர்வின்போது கிழக்கு மாகாண சபையில் அமைச்சர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருந்தவர்கள் ஐந்து பேர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று சென்றுள்ளமைக்காக அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து சபை நடவடிக்கைகளை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் ஆரம்பித்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கிழக்கு மாகாண சபையில் இருந்து பாராளுமன்றம் சென்றவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து உரை நிகழ்த்தினார்.
கிழக்கு மாகாண சபயில் இருந்து இலங்கையின் உயர்ந்த சபையான பாராளுமன்றத்திற்குச் சென்றுள்ள எமது உறுப்பினர்களை மக்கள் விருப்பத்துடன் அவர்களின் வாக்குப்பலத்துடன் அனுப்பிவைத்துள்ளமையானது மக்களின் தேவைக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதற்கான சான்றே தவிர வேறொன்றுமில்லை.
எனவே மக்கள் பிரதிநிதிகளான அனைவரும் மக்களுக்காற்ற வேண்டிய பாரிய பணிகள் ஏராளம் உள்ளன அவைகளுக்கு முன்னுரிமை வழங்கி மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றி போற்றப்படும் ஒரு பிரதிநிதியாகத் திகழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றும் தனது வாழ்த்துரையில் முதலமைச்சர் கூறினார்.
அதன்பின்னர் அமைச்சர்களான கே.துரைராஜசிங்கம். ஆரியபதி கலபதி, எஸ்.தண்டாயுதபாணி மற்றும் சகல உறுப்பினர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து உரையாற்றினர்.
நேற்றைய சபை அமர்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர், ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. பாராளுமன்றம் தெரிவான ஐந்து உறுப்பினர்களுக்குப் பகரமாக எவரும் சபைக்கு சமுகமளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
