வாகனங்களைக் குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்யும் நடவடிக்கைக்கு இலங்கை மத்திய வங்கி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதன்படி, இதற்குப் பின்னர் வாகனங்களை முழுமையான குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நிதிச்சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானமொன்றுக்கு அமைய, லீசிங் வசதிகளை வழங்கும் நிதி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய புதிய நடைமுறைகளை உள்ளடக்கிய சுற்றுநிரூபமொன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த சுற்றுநிரூபத்தின் பிரகாரம், வாகனத்தின் பெறுமதியில் 70 சதவீதத்திற்கு மாத்திரமே குத்தகை வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சுற்று நிரூபத்தின் பிரகாரம், நிதி நிறுவனங்கள் ஆரம்ப வைப்புத்தொகை இல்லாது வாகன கொள்வனவுக்காக வழங்கிய முழு லீசிங் வசதியை, இனி வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், வாகனங்களைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள் 30 வீத கொடுப்பனவைக் கட்டாயமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் இந்த தீர்மானத்தினால், இலங்கையின் வாகனக் கொள்வனவு குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிங்சிகே தெரிவித்துள்ளார்.
