(பழுலுல்லாஹ் பர்ஹான்)
வீதி விபத்துக்களை தடுக்க காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவினால் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் செல்லும் மக்கள் பாவனைக்கு உதவாத பழைய ,புதிய வாகனங்கள் மற்றும் பழுதடைந்த வாகனங்களை பரிசோதிக்கும் விஷேட நிகழ்வு கடந்த22-09-2015 அன்று செவ்வாய்க்கிழமை இரவு மட்டக்களப்பு கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் மீரா பாலிகா தேசிய பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றது.
காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவும், மட்டக்களப்பு மோட்டார் போக்குவரத்து திணைக்களமும் இணைந்து ; மேற்படி வாகனங்களை பரிசோதிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி துஷார ஜெயலால் தலைமையில் இடம்பெற்ற இவ் வாகன பிரிசோதனை நிகழ்வில் மட்டக்களப்பு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பரிசோதகர் வீ.ஆர்.ரி.லக்ஷ்மன் பண்டார ,மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உத்தியோகத்தர் பாஹிம் உட்பட காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பரிசோதகர் வீ.ஆர்.ரி.லக்ஷ்மன் பண்டாரவினால் பழைய பழுதடைந்த வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டதுடன், ஒழுங்கற்ற முறையில் வாகனங்களை வைத்துக்கொண்டு செலுத்திய வாகன உரிமையாளர்களின் சாரதி அனுமதிப்பத்திரமும் பொலிசாரினால் பறிமுதல் செய்யப்பட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பரிசோதகரினால் ஒரு பத்திரம் வழங்கப்பட்டதுடன் அப் பத்திரம் வழங்கப்பட்டு பத்து தினங்களுக்குள் ஒழுங்கற்ற முறையில் செலுத்தப்பட்ட வாகனங்கள் சரிசெய்யப்பட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பரிசோதகரிடம் காட்டப்படவேண்டும் அப்படி காட்டப்பட்டால் சாரதி அனுமதிப்பத்திரம் பொலிசாரினால் கொடுக்கப்படும் இல்லாவிட்டால் குறித்த வாகனங்கள் மக்கள் பாவனைக்கு உதவாத வாகனம் என்று நீதி மன்றத்திற்கு ஒப்படைக்கப்படும் என காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி துஷார ஜெயலால் தெரிவித்தார்.
இவ் வாகன பரிசோதனையின் போது மக்கள் பாவனைக்கு உதவாத 38 வாகனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், இதில் மோட்டார் சைக்கிள் 11 ,வேன் 6,லொறி10,முச்சக்கர வண்டி 07,பஸ் 04 உள்ளிட்ட இலகு ரக மற்றும் கணரக வாகனங்களும் அடங்கும்.
மேற்படி பழைய வாகனங்கள் பரிசோதிக்கப்படும் போது அவதானிக்கப்படும் விடயங்கள்… ஒழுங்கற்ற முறையில் பிறேக்,தேய்ந்த டயர்,மேலதிகமான அலங்காரங்கள்,லைட்,சிக்னல் லைட் ,கோன்,ஙியர் ,கிலச் போன்ற பல்வேறு வாகன ஒழுங்குகள் அவதானிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.