( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அம்பாரை மாவட்டத்தில் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகங்களைக் குறைப்பதற்கு அல்லது, ஒழிப்பதற்கு புதிய பொறிமுறைகளைக்
கையாழ்வது தொடர்பாக சிறுவர் தலைமைத்துவ அரச உத்தியோகத்தர்களுக்கிடையில் கலந்துரையாடும் உயர்மட்ட மாநாடு இன்று அம்பாரை மாவட்ட சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அம்பாரை மாவட்ட சிரேஷ்ட சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் எம்.ஏ.ஏ.வசீர்டீன் தலைமையில் இடம் பெற்ற இம்மாநாட்டில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஸ்சேஷ். எம்.ஐ.எம்.அமீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் இம்மாநாட்டில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி எம்.எச்.எம்.ஹசீம், அம்பாரை மாவட்ட சிறுவர் பாதுகாப்பு இணைப்பாளர் யூ.எல்.அசார்டீன், முன்பள்ளி உதவிக் கல்விப்பணிப்பாளர்களான ஏ.எம்.லாபீர், சீ.எஸ்.அழககோன், அம்பாரை சிறுவர் நன்நடத்தை அலகுப் பொறுப்பதிகாரி ஏ.எம்.லலித் ரத்னபால உள்ளிட்ட உயரதிகாரிகளுடன், அம்பாரை மாவட்டத்திலுள்ள சிறுவர் நன்நடத்தைப் பொறுப்பதிகாரிகள், முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முன்பிள்ளைப்பருவ உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், சிறுவர் நலன்பேணல் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
நாளுக்கு நாள் சிறுவர்களுக்கு எதிராக இளைக்கப்படும் கொடுமைகள், அதன் தன்மைகள், அதற்கான காரணங்கள், அவற்றிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்கும் புதிய பொறிமுறைகள், இவற்றை நடைமுறைப்படுத்தும் உபாயங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டது.
'மாதமொன்றிற்கு 03 பெண் சிறுவர்கள் வீதம் நிர்க்கதிக் குள்ளாக்கப்படுகின்றனர். இப்பிள்ளைகளை அவரவர் மார்க்க வழிமுறைகளில் பராமரிப்பதற்கான சிறுவர் இல்லங்கள் இருக்கின்றன. ஆனால் இஸ்லாமியச் சிறுவர்களைப் பராமரிக்கக் கூடிய சிறுவர் இல்லம் ஒன்றேனும் அம்பாரைப் பிராந்தியத்தில் இல்லாமலிருப்பது பெரும் குறையாகும்' என்று சிரேஷ்ட சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் வசீர்டீன் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, இஸ்லாமியச் சிறுவர்களைப் பராமரிக்கக் கூடிய சிறுவர் அபிவிருத்தி நிலையமொன்றை பாலமுனை பிரதேசத்தில் அமைக்கப் போவதாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஐ.எம்.அமீர் தெரிவித்தார்.