எதிர்வரும் காலங்களில் அலரி மாளிகையில் இடம்பெறும் வைபவங்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு வருகை தரும் அரச அதிகாரிகள் தனித் தனி வாகனங்களில் வரக்கூடாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடும் தொனியில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம், அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றுக்கு வருகை தந்த அரச அதிகாரிகள் 15 பேர் 16 வாகனங்களைப் பயன்படுத்தியிருந்த நிலையில் அவர் இவ்வாறு கடுமையான கட்டளையினைப் பிறப்பித்துள்ளார்.
குறித்த சந்திப்பின் போது, அதிகாரி ஒருவர் வந்த வாகனம், அவரது மனைவியின் தேவைக்காக வெளியில் செல்ல, கலந்துரையாடலை முடித்த அதிகாரி பிரிதொரு வாகனத்தை வரவழைத்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இது குறித்து அலரிமாளிகை பாதுகாப்பு அதிகாரிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்குக் கொண்டு செல்ல பிரதமர் கடுப்பாகியுள்ளார்.
இந்நிலையிலேயே, இனிவரும் காலங்களில் அலரிமாளிகைக்கு வருகை தரும் அரச அதிகாரிகள் தனி வாகனங்களில் வரக் கூடாது என்றும், ஒரு வாகனத்தில் குறைந்தது நான்கு அரச அதிகாரிகளாவது சேர்ந்து வருகை தர வேண்டும் என்றும் கண்டிப்பான உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளார்.
இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் மற்றும் அரச நிறுவனங்களின் வீண்செலவுகளைத் தவிர்ப்பதுடன், எரிபொருள் சிக்கனத்தையும் கடைப்பிடிக்க முடியும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
