நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களின் ஆலோசனையின் அடிப்படையிலேயே வரவு – செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதோடு, அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு – செலவுத்திட்ட முன்மொழிவை தோல்வியடையச் செய்யாமல் நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர நாடாளுமன்ற சட்டத்தின்படி முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவது அரசியல் யாப்பைப் பற்றிய தெளிவில்லாத் தன்மையே எடுத்துக்காட்டுவதாகவும் பிரதமர் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க் கட்சிகளினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் 32 பேர் கையெழுத்திட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
ஏனைய எதிர்க் கட்சிகளின் உறுப்பினர்களிடம் இன்றும் கையொப்பங்களைப் பெற்ற பின்னர் குறித்த பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
