தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தலைநகரிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோரின் நலன் கருதி மேலதிக பஸ் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
பயணிகளின் தேவைகருதி மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும், என இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் ராஜா குணதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
ஹட்டன் நோக்கி செல்லும் பயணிகள் கொழும்பு புறக்கோட்டை மத்திய பஸ் தரிப்பிடத்தில் அதிகரித்துள்ளதுடன், நுவரெலியா மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட தூர பிரதேசங்களுக்கான பயணிகளும் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதற்கமைய மேலதிக பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சொந்த ஊருக்கு சென்று கொழும்புக்கு திரும்புவோருக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ராஜா குணதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
