விசாரணை பொறிமுறைக்கான காலம் 1985ம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பவேண்டும்
என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் நிறை வேற்றியிருப்பதை உலமா
கட்சி வரவேற்பதுடன் இது பற்றி பாராளுமன்றில் கவன ஈர்ப்பு பிரேரணை கொண்டு
வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இது பற்றி உலமா கட்சி தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்ததாவது,
இலங்கையின் யுத்த கால விசாரணை என்பதை உலமா கட்சி பல காலமாக வலியுறுத்தி
வருகிறது. இதனையே அண்மையில் தென்கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்
மாணவர்களும் தமது ஆர்ப்பாட்டத்தின் மூலம்
வலியுறுத்தி இருந்தனர்.
யுத்த கால விசாரணையை 2009டன் மட்டுப்படுத்த சிலர் முயற்சிப்பதன் மூலம்
உண்மைகளை புறக்கணிக்க இடமளிக்க முடியாது.
யுத்தத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஓர் இனம் என்றால் அது
முஸ்லிம்களாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு முஸ்லிம்கள் இந்த நாட்டின்
ஒருமைக்காக பலி கொடுக்கப்பட்டுள்ளார்கள்.
அத்தகைய உண்மைகளை கொண்டு வந்து அநியாயக்காரர்களை விசாரிக்கக் கூடிய
வகையில் அமைய வேண்டுமாயின் யுத்த விசாரணையின் கால் எல்லை என்பது 1985 என
இருக்க வேண்டும் என்பதை எவராலும் புறந்தள்ள முடியாது.
இவ்வாறு விசாரணை மேற்கொள்ளப்படும் போதே
இனப்பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம்களும் சம பங்காளர்கள் என்பதை
சர்வதேசம் புரிந்து கொள்ளும். இதற்கான முயற்சியில் முஸ்லிம்களின் அதிக
வாக்குகளை பெற்ற கட்சி என்ற வகயில் முஸ்லிம் காங்கிரசுக்கு பாரிய கடப்பாடு உண்டு.
ஆகவே அக்கட்சியின் இத்தீர்மானம் பெரிதும் வரவேற்கப்பட வேண்டிய
ஒன்றாகும் என்பதுடன் வெறுமனே பிரேரணை வேற்றியதுடன் அமைதியாகி விடாது
அதற்கான முயற்சிகளை பாராளுமன்றத்திலும்
அதற்கு வெளியிலும் முன்னெடுக்க வேண்டும் என உலமாகட்சி வலியுறுத்துகிறது.
(ஜுனைட்.எம்.பஹ்த்)
