காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் அடுத்த மாதம் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளன.
இந்த விசாரணைகளில் சாட்சியமளிக்க 2 ஆயிரத்து 538 பேர் இதுவரை விண்ணப்பித்துள்ளனர் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
காணாமற் போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் ஏறத்தாழ முடிவடைந்து விட்டன எனக் கூறப்படும் நிலையில் யாழ்ப்பாணத்தில் பலர் சாட்சியமளிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதையடுத்து அடுத்த மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் விசாரணைகள் இடம்பெறவுள்ளன. யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதியும், வேலணையில் 12 ஆம் திகதியும், சண்டிலிப்பாயில் 13 ஆம் திகதியும், பருத்தித்துறையில் 14 ஆம் திகதியும், சாவகச்சேரியில் 15 ஆம் திகதியும், கோப்பாயில் 16 ஆம் திகதியும் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
இந்த விசாரணைகளில் சாட்சியமளிப்பதற்காக இதுவரை 2 ஆயிரத்து 538 பேர் விண்ணப்பித்துள்ளனர். எனினும் சாட்சியமளிக்க வேண்டியவர்கள் இன்னும் இருப்பதால் இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும், இதன் பின்னரே இறுதி விவரங்கள் வெளியிடப்படும் என்றார் அவர்.
