விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை பக்கத்தில் வைத்திருந்த போதும், 12 ஆயிரம் புலிகளை விடுதலை செய்தபோதும் மஹிந்த, கோத்தபாய ஆகியோருக்கு ஏற்படாத உயிர் அச்சுறுத்தல் தடுப்பில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் ஏற்படப்போகின்றதா என முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கேள்வி எழுப்பினார்.
சிங்கள மக்களை சிறுபான்மை மக்களுக்கு எதிராக திருப்பும் முயற்சிகளை இவர்கள் இன்னும் கைவிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தமது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ ஆகியோர் தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், கடந்த காலத்தில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பின்னர் விடுதலைப் புலிகளின் சர்வதேச பிரிவினால் நாட்டிற்கு எதிரான பலமான செயற்பாடுகள் காணப்பட்டன. ஆனால் நாட்டில் மீண்டும் ஒரு ஆயுத மோதலை ஏற்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படவில்லை.
ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் அரசியல் செயற்பாடுகளை தக்கவைக்கும் ஒரே நோக்கத்திலேயே நாட்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் ஐந்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக புலிக்கதைகளை கூறி வந்தனர். இன்றும் அதே கதைகளை கூறி மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள்.
முன்னாள் அரசாங்கத்தில் 12ஆயிரம் விடுதலைப்புலிகளை விடுவித்தனர். புலிகளின் முக்கிய தலைவர்களை அரசாங்கத்தில் இணைத்துக்கொண்டு கட்சியிலும் அமைச்சுகளிலும் முக்கிய பதவிகளை வழங்கினர். அவ்வாறு இருக்கையில், சர்வதேச புலம்பெயர் அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த போதும், புலி உறுப்பினர்களை அருகில் வைத்திருந்த போதும் இவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் எவையும் ஏற்படவில்லை.
ஆனால் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைத்துள்ள தமிழ் கைதிகளை விடுவிக்க கோரும்போது அவர்களால் மஹிந்த, கோத்தபாய ஆகியோரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக கூறுகின்றனர். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. சிங்கள மக்களை சிறுபான்மை மக்களுக்கு எதிராக முரண்படவைக்கும் ஒரு நடவடிக்கையே இவர்களால் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த அரசாங்கம் குற்றவாளிகளை தண்டிக்காது பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. குறிப்பாக எவன்கார்ட் விவகாரத்தில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ பக்கச்சார்பாக செயற்படுகின்றார் என்பதை நான் ஆரம்பத்தில் இருந்தே தெரிவித்து வருகின்றேன்.
அதேபோல் மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதியும் அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷவும் அமெரிக்காவில் நெருங்கிய நண்பர்களாக செயற்பட்டு எவன்கார்ட் விவகாரம் தொடர்பில் உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளமை தொடர்பில் ஆதாரங்களும் என்னிடம் உள்ளன.
இவை தொடர்பான புகைப்படங்களை நான் ஊடகங்களிடம் வெளிப்படுத்தியுள்ளேன். அவ்வாறு இருக்கையில் அரசாங்கம் இந்த விவகாரம் தொடர்பில் மூடிமறைக்காது உண்மைகளை கண்டறிய வேண்டும் என்றார்.
