(முஜீப் இப்றாஹிம்)
துவேசமும், பாலுணர்வும் ஒரே மாதிரியானவை. எல்லோருக்குள்ளும் அவை அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கின்றன.
தூண்டப்பட்டால் மாத்திரமே அவை துலங்கும்!
துவேசம் என்பது இரு சகோதரிகளுக்கிடையில் கூட தோன்ற முடியும்!
ஒருத்தியின் கணவரை விட மற்றவளின் கணவர் வசதியாக இருந்து விட்டால் போதும் இருவருக்கிடையிலும்
துவேசம் வெடித்துவிடும்!!!
இவ்வாறு ரத்த உறவுகள் முதல் கொண்டு வேற்று இனக்குழுமங்கள் வரை துவேசம் பரந்து செல்கிறது.
நூறு வீதம் அல்லது மிகப்பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழுகின்ற ஊர்களுக்குள் மாற்று மத வழிபாட்டுத்தலங்களை யாராவது நிறுவ எத்தனித்தால் நாம் எவ்வளவு எதிர்வினைகளை ஆற்றுகிறோம்?
ஆனால் வேற்று மதத்தவர்கள் பெரும்பான்மையாக வாழுகிற இடங்களில் பெரும்பாலும் வெற்றிகரமாக நமது பள்ளிவாயல்களை நிறுவ முடிகிறது!
எங்காவது ஒரு சில இடங்களில் அவற்றுக்கு தடைகள் வருகிற போது நாம் வெளிப்படுத்தும் உணர்வுகளின் வீச்சும் வேகமும் நாம் அறிவோம்.
அதன் பின்னுள்ள நியாயத்தன்மையினை தனிமையில் உட்கார்ந்து சிந்தித்தால் நாம் எவ்வாறு மறுக்கிறோமோ அவ்வாறே அவர்களும் மறுக்கிறார்கள் என எண்ணத்தோன்றும்.
இலங்கை போன்ற பல் இனங்களும் வாழும் நாட்டில் சுதந்திரம் தொடக்கம் நம்மை தமது அரசியல் தேவைகளுக்காக பிரித்தாண்ட அரசியல் தலைவர்கள் அவர்களது இலக்குகளில் வெற்றி பெற்றார்கள்.
மக்கள்தான் தோற்றுப்போனார்கள்.
இங்கே இனங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வு இல்லை, பரஸ்பர ஒற்றுமையும் இல்லை.
துருவங்களாகி கிடக்கிறது இனங்கள்!
என். ஜீ. ஓ க்களால் செயற்கையாக கட்டமைக்க முனையும் சமாதான இனவுறவுகளால் நீடித்து நிலைக்கவும் முடியாது.
தேசத்தில் இனங்களுக்கிடையே பரஸ்பர ஒற்றுமை நிலவுவது போல் போலி மாயைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் முன்னர் யுத்தத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடாத்திய நமது நாட்டு அரசியல் தலைமைகள் இப்போது இனவாதத்தை வைத்து துவேசத்தை தூண்டி அரசியல் செய்வதை எல்லா இனங்களிலும், இடங்களிலும் காண முடிகிறது.
மஹிந்த ராஜபக்ஷ மறைமுகமாக இனவாத அரசியலைச்செய்து சொற்ப வித்தியாசத்தில் தோற்றார்.
ஞானசாரவால் நாடு முழுவதும் இருபதாயிரம் வாக்குகளை எடுக்க முடிந்தது.
இப்போது மஹிந்த தரப்பு வெளிப்படையாகவே இனவாத அரசியலைச்செய்கிறது....
ஞானசாரவும் சளைத்தபாடில்லை.
இந்தப்பின்புலத்தில் நமது சோனக அரசியல்வாதிகள் தங்கள் இருப்பை தக்கவைத்துக்கொள்ள செய்கின்ற இனத்துவேச அரசியலானது நடுநிலையான சிங்கள மக்களையும் மேலும் சினமூட்டுவதாக அமைந்து விடுகிறது.
சிறுபான்மையின் ஆதரவு பெற்ற அரசு, நாம் உருவாக்கிய ஜனாதிபதி என்றெல்லாம் நாமடிக்கின்ற தம்பட்டங்கள் நேர்மையாக சிந்திக்கின்ற பெரும்பான்மை மக்களை கூட பேரினவாத்த்தின் பக்கம் பலவந்தமாக சாய்த்துவிடும்.
இந்தப்போக்கானது மஹிந்த ஞானசார கூட்டணியின் மீள் எழுச்சிக்கும் பெரும்பான்மை மக்களை இனவாதிகளாக திசைதிருப்பி விடுவிதற்கும் போதுமானது.
நாம் உருவாக்கிய அரசு என்ற
மமதையில் முன்னரை விட படுவேகமாக முகநூலில், வட்ஸ் அப்பில் வீடியோக்கள் மூலம் பெரும்பான்மை இனத்தை காயப்படுத்தும் வகையில் கருத்துகளை நம்மவர்கள் பரப்புவதை அவதானிக்க முடிகிறது.
அதற்கு அவர்களிடம் இருந்து படு மோசமான எதிர்வினைகள் வருகின்றன.
அதை அவர்கள்தான் ஆரம்பித்தார்கள் என்று வைத்துக்கொண்டாலும், அதற்கு பதில் சொல்வதால் ஆகப்போகும் நன்மை ஒன்றுமில்லை மாறாக தொடர்ந்தும் வசவுகளும் நமது மார்க்கத்தின் மீதான வக்கிரங்களுமே வளரும்.
அந்த வீடியோக்களில் கதைப்பதெல்லாம் பேரரறிஞர்கள் அல்ல! யாரோ வெளிநாடுகளில் வசிக்கும் இனவாதம் பிடித்த கொந்தராத்துக்கார்ர்களே...
அல்லது உள்நாட்டில் வாழுகிற அறை குறை அறிவுகொண்ட இனவாத எச்சங்களே...
இவற்றை நாமும் அலட்டிக்கொண்டு சொற்போர் தொடுப்பதால் தேசத்தில் எதிர்பாராத கோணத்தில் இன முறுகலொன்று ஏற்பட்டுவிடும்.
அதற்குரிய பெற்றோலைத்தான் பேரினவாத சக்திகள் ஊற்றிக்கொண்டிருக்கின்றன....
நமது கையில் இருக்கும் சிறு தீப்பொறி போதும் தேசம் பற்றி எரிவதற்கு.....
கடைசியில் அதில் குளிர்காயப்போவது நம் நாட்டு அரசியல்வாதிகளே!
அப்போது
சோனக அரசியல்வாதிகள் மட்டும் சும்மா நடுங்கிக்கொண்டா இருப்பார்கள்?
அவர்களும் சேர்ந்தே குளிர்காய்வர்.
