இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் இராமர் பாலத்தை அமைப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் எதுவித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. அவ்வாறானதொரு பாலத்தை அமைக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லையென்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி மற்றும் பல்கலைக்கழக கல்வித்துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
செய்தி எதுவும் இல்லாதிருக்கும் எதிர்க்கட்சியினர் செய்தியை உருவாக்குவதற்காக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைக்கப்படவிருப்பதாக பிரசாரங்களை செய்து வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். பத்தரமுல்லையிலுள்ள அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் கூறினார்.
நேற்றுமுன்தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டிருந்த உதய கம்பன்பில, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இராமர் பாலத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் நோக்கிலேயே அமைச்சர் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தியிருந்தார்.
இராமர் பாலத்தை மீண்டும் அமைக்கப் போவதாக இந்திய அரசியல்வாதிகளே கூறியுள்ளனர். இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அரசாங்கத்திடம் எதுவித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. தனது இந்திய விஜயத்தின் போது இது தொடர்பில் எந்தவித கலந்துரையாடலும் நடைபெறவில்லையென பிரதமர் ஏற்கனவே பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
அது மாத்திரமன்றி இரு நாட்டுக்கும் இடையில் பாலம் அமைக்கவேண்டிய தேவை இல்லையென்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்தியாவின் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் சேது சமுத்திரத்திட்டத்தை ஆரம்பித்தனர். அத்திட்டம் உயிர் பல்வகைமைக்கும், இயற்கைக்கும் பாதிப்பாக அமையும் என்பதால் அதனை கைவிட்டனர். அதேபோல இந்த இராமர் பாலத் திட்டமும் கைவிடப்பட்டுவிடும் என்றார்.
அரசியல் ரீதியாகத் தொங்கிக் கொள்வதற்கு எந்தவிடயமும் இல்லாதிருக்கும் எதிர்க்கட்சியினர் இந்திய விரோத பிரசாரங்களை முன்னெடுத்து மீண்டும் இனவாதத்தைத் தூண்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல மேலும் தெரிவித்தார்.
