
ஐ.எஸ்.அமைப்பில் இலங்கை உறுப்பினர் - முஸ்லிம் மக்களின் நிலைப்பாட்டுக்கு பெரும்பான்மை ஊடகங்கள் பாராட்டு
சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்பிலும் அதனுடன் இணைந்து செயற்பட்ட இலங்கையைச் சேர்ந்த நபர் தொடர்பிலும் முஸ்லிம் அமைப்புகள் தமது நிலைப்பாட்டை உடனடியாக வெளியிட்டமை குறித்து சிங்கள ஊடகங்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளன.
சிரியாவில் போராடி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் இணைந்து செயற்பட்டவேளை அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளின் வான் தாக்குதலில் கொல்லப்பட்ட இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞரான நிலாம் முஹ்சின் என்பவர் தொடர்பில் கடந்த வாரம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையில் 11 முஸ்லிம் அமைப்புகள் இணைந்து கூட்டுப் பிரகடனம் ஒன்றினை வெளியிட்டிருந்தன.
அதில் குறித்த நபரின் செயற்பாட்டை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஐ.எஸ். அமைப்பு இஸ்லாத்துக்கு முரணான அமைப்பு என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேபோன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தது. அதில் இந்த சம்பவம் தொடர்பில் தாம் கவலையடைவதோடு இதனுடன் தொடர்புபட்டவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டனை வழங்குமாறும் அதற்குத் தேவையான ஒத்துழைப்புகளை தர தயாராகவிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே முஸ்லிம் அமைப்புகள் சர்வதேச தீவிரவாதம் தொடர்பில் உடனடியாக தமது நிலைப்பாட்டை முன்வைத்தமைக்கு சிங்கள பத்திரிகைகளும் இணையதளங்களும் வரவேற்பையும் பாராட்டையும் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் நேற்று முன்தினம் சனிக்கிழமை வெளியான 'லங்காதீப' பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில், இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவர் பயங்கரவாத இயக்கம் ஒன்றில் இணைந்து செயற்பட்டார் என்பதற்காக முழு இலங்கை முஸ்லிம்களையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதை பெரும்பான்மை மக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த விவகாரம் தொடர்பில் பொது பல சேனா அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அதில் விடுதலைப் புலிகளை விட இஸ்லாமிய தீவிரவாதம் ஆபத்தானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலன்த விதானகே கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய 25 விடயங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இஸ்லாமிய தீவிரவாதத்தை வெல்வது புலிகளை வெல்வதை விடக் கடினமாயினும் அதனை வெல்லும்பட்சத்திலேயே மக்களுக்கும் நாட்டுக்கும் வரலாற்று ரீதியிலான வெற்றி கிடைத்ததாக அர்த்தப்படும் எனவும் அக் கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


















