மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நிலைத்து நிற்கக் கூடிய பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தி உட்கட்டுமானத்தினை மேம்படுத்தி தொடர்ந்தும் வறுமைக் கோட்டிற்குள் இருக்கின்ற மக்களை மேம்படுத்தி மாவட்டத்தினை ஒரு சிறந்த முன்னேற்றகரமானதாக மாற்றுவதே நோக்கமாகும் என மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்சார்ள்ஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஈஸ்ட் லகூண் ஹோட்டலில் நடைபெற்ற யு.எஸ்.எய்ட்டின் வாழ்வாதார அபிவிருத்திக்கான உதவித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இறைச்சிக் கோழி வளர்ப்பு முகாமைத்துவ பயிற்சி செயற்றிட்டத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் திருமதிபி.எஸ்.எம்சார்ள்ஸ்,
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு சமூகப்பிரச்சினைகளுக்கு மத்தியில் அவற்றினைத் தீர்ப்பதற்கான மெல்ல மெல்ல நடந்து கொண்டிருக்கிறோம். 5 லட்சத்து 80ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த மாவட்டத்திற்குத் தேவையாக இருக்கின்ற முட்டை, பால், இறைச்சிக் கோழி, மரக்கறிகள், பழங்கள் என்பவற்றிலே 80 வீதமானவைகள் வேறு மாவட்டங்களிலேயிருந்தே வந்து கொண்டிருக்கிறது.
இந்த மாவட்டத்தில் மனித வளம் இருக்கிறது. நில வளம், நீர்வளம் இருக்கிறது. இதை விடவும் இயற்கை அழகு, இயற்கையோடு இணைந்த பல்வேறு வளங்கள் தரப்பட்டுள்ளபோதும் இவற்றை எங்களுடைய மாவட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான செயற்பாட்டை முன்னெடுக்காமல் இருப்பது தான் இலங்கையிலே இரண்டாயிரத்து பன்னிரண்டாம், 13ஆம் ஆண்டுகளில் வறுமை கூடிய மாவட்டமாக தெரிவிக்கப்படக் காரணம்.
அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் படி 2013, 2014ஆம் ஆண்டு புள்ளி விபரங்களின் படி அந்த வறுமை 0.9 வீதம் குறைக்கப்பட்டு 23ஆவது மாவட்டமாகக் கணிக்கப்பட்டுள்ளது. எனவே நாங்கள் மிக மிக மெதுவாக எங்களுடைய பாதையிலே பயணித்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் பிரச்சினைகளுக்கிடையிலே 80 பேருக்கான வாழ்வாதாரத் தொழில் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளமையானது ஒரு அத்தியாயமாகும்.
புரட்சி என்பதோ, மாற்றம் என்பதோ ஒரு நாளில் ஏற்படுத்தப்படுவதல்ல. ஒரு சிறு விடயம் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தும். மட்டக்களப்பு மாவட்டத்தின் இருக்கின்ற பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நிலைத்து நிற்கக்கூடிய பல்வேறு உட்கமைப்பு ரீதியான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவை நீண்ட கால அடிப்படையில் மாவட்டத்தின் வறுமையை ஒழிக்கும் என்று நம்புகிறோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் படி 180,000 பேர் எந்தவித தொழிலும் இல்லாதவர்களாக உள்ளனர். இவர்களில் 18 வயது முதல் 30 வயதுக்கிடைப்பட்ட 100,000 இளைஞர், யுவதிகளும் அடங்குகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் இடைவிலகுதல், சிறுவயதுத் திருமணம், விவகாரத்து, பெண்கள் வெளிநாடு செல்லுதல் ஆகியனவும் ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு தடையாக உள்ளன.
மேலும், தற்போது ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் பாதிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏனைய இடங்களை விட மிக குறைந்து காணப்படுகின்றது. ஏனெனில் முன்கூட்டியே வெள்ள அனர்த்தம் ஏற்படுவதிலிருந்து பாதுகாப்பான நடவடிக்கைகளை நாம் எடுத்தமையாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 148 குடும்பங்கள் திங்கட்கிழமை அவர்களது இருப்பிடங்களிலிருந்து வேறு இடத்தில் அமர்த்தப்பட்டார்கள். ஆனால் அன்று மாலையிலேயே அவர்கள் அவர்களுடைய இருப்பிடம் சென்றுவிட்டார்கள். இன்றைய நிலையில் எந்தவிடமான இடம் பெயர்வுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இல்லை. யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஒப்பிட்டளவில் கடந்த வருடங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளின் அடிப்படையில் இவ்வருடத்தில் வெள்ள அனர்த்தம் பாதிப்புக்கள் இன்றி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த வெள்ள அனர்த்தப் பாதுகாப்புக்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சர்வதேச நிறுவனங்கள் பல உதவிகளை வழங்கியிருக்கின்றன. குறிப்பாக உலக வங்கி ஆயிரத்து நூறு மில்லியனுக்கு மேற்பட்ட தொகையை வெள்ள அனர்த்திலிருந்து பாதுகாப்பதற்காக வழங்கியிருக்கிறது. அதைவிட ஐ.ஓ.எம்.போன்ற நிறுவனங்களும் பல திட்டங்களை மேற்கொண்டிருக்கின்றனர்கள்.
அதனை விடவும் வெள்ளம், வரட்சி ஆகிய இரண்டுக்கும் சம்பந்தப்பட்டிருக்கின்ற கித்துள் றுகம் குளங்களை இணைப்பதற்கான வேலைத்திட்டம் கடந்த வரவு செலவுத்திட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டு இந்த வருடத்தில் அத்திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதற்குரிய வேலைகள் நடைபெற்று வருகின்றன.
அதைவிடவும் முந்தானை ஆற்றினை உலக வங்கியின் உதவியுடன் ஆய்வுக்குட்படுத்தி வரட்சி, வெள்ளம் ஆகிய அனர்த்தங்களை எதிர் கொள்ளும் வகையிலான சோதனைக்கான உபகரணங்கள் முந்தானை ஆற்றிலும், இந்த மட்டக்களப்பு வாவியின் ஓரங்களிலும் பொருத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நிலைத்து நிற்கக் கூடிய பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தி உட்கட்டுமானத்தினை மேம்படுத்தி தொடர்ந்தும் வறுமைக் கோட்டிற்குள் இருக்கின்ற மக்களை மேம்படுத்தி மாவட்டத்தினை ஒரு சிறந்த முன்னேற்றகரமானதாக மாற்றுவதே நோக்கமாகும். இந்த மாற்றம் எங்களால் ஏற்படுத்தப்படுவதல்ல. நீங்களும் மாற வேண்டும். நீங்கள் என்று மாற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அன்று நிச்சயமாக இந்த மாவட்டம் உங்களுக்குரிய மாவட்டமாக மாறும் என்று தெரிவித்தார்.