( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
சம்மாந்துறைப் பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் 1000 பேருக்கு பெறுமதியான கற்பித்தல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று சம்மாந்துறை அல்-அர்ஷத் மகா வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் சஹுதி அரேபிய நிதாஉல் ஹைர் நிறுவனப் பணிப்பாளர் அஷ்சேஷ். காலித் பின் அத் தாவூத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
அம்பாரை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் எஸ்.எச்.ஆதம்பாவா மௌலவி, பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா, பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.சஃபீர், இணைப்பாளர்களான ஏ.எல்.எம்.பசீர், ஏ.எம்.தபீக், வித்தியாலய அதிபர் ஏ.எல்.அப்தல் மஜீட் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
பிரதம அதிதி சஹுதிஅரேபிய நிதாஉல் ஹைர் அமைப்பின் பணிப்பாளர் அஷ்சேஷ் காலித் பின் அத் தாவூத் இங்கு உரை நிகழ்த்துகையில்:- 'இப்பிரதேச மக்களின் பல்வேறு குறைகளை நன்கு அறிந்து கொண்ட உங்கள் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் அவர்களின் வேண்டுகோளை எமது அமைப்பு ஏற்றுக் கொண்டு, உங்களுக்கான பல அடிப்படைத் தேவைகளுக்கு உதவி வருகின்றோம். இதற்காக நீங்கள் எமக்காக இறைவனிடம் பிரார்த்தனை புரிந்தால் மட்டும் போதும். வேறு எதுவுமே செய்யத் தேவையில்லை' எனத் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:-'பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக இருந்து அரச நிதியில் பல உதவிகளை மக்களுக்குச் செய்தது போதாதென்று இவ்வாறான தனவந்தர்களின் உதவிகளைக் கொண்டும் மக்களுக்கு உதவி வருகிறோம். இன்னும் பல உதவிகளைச் செய்யத் திட்டமிட்டிருக்கின்றோம். எல்லாவற்றிற்காகவும் எமக்காகப் பிரார்த்திக்குமாறு வேண்டுகிறோம்' எனக் கேட்டுக் கொண்டார்