(எம்.எல்.எம்.அன்ஸார்)
நீ வெளியே போகின்ற போது
அணிகின்ற அபாயாவை
இன்று பகல்
மேகம் உடுத்திருந்ததைக்
கண்டேன்.
நீ காயப்போட்டிருந்ததை
அது களவெடுத்ததா?
கைமாற்றுக்குக் கொடுத்தாயா?
*
வீட்டில் நீ உடுக்கின்ற
சல்வார் ஆடைகளை அவ்வப்போது
பூ மரங்களுக்கு கொடுத்து
உதவுவது எனக்குத் தெரியும்!
*
நிலவுக்கு உடுதுணிகள்
வாங்கிக் கொடுப்பதற்கு
வானம் இரவில் வந்துவிட்டுப்
போகிறது.
உனது இரவு ஆடைகளை ஒருபோதும்
இரவல் கேட்பதில்லை நிலவு
அதனால் !
*
சரி போகட்டும்,
கருப்பு அபாயாவை கடனுக்கு
அணிந்தாலும்
மேகம் ஒழுக்கமாகத்தான் இருக்கிறது.
எப்படியும் இன்று சாயந்தரம்
உன் வீட்டுக்கு
மச்சியைப்போல மழை வந்து
சேர்ந்துவிடும்.
சமுசாவும் பறங்கி வாழைப்பழமும்
வாங்கி வை.
மழை சாப்பிட்டுவிட்டுப்
போவதற்கு!
*
இந்த நாட்களில் சூரியன்
கெட்டுப் போய்த்தான்
கிடக்கிறது.
சூரியனின் பார்வை படாமல்
மரங்களும் மலர்களும்
அதன் அதன் வீட்டுக்குள்
பயந்து ஒதுங்கிப்போய்
நிற்கின்றன!
*
நீ சிரிப்பை இரை குத்தி
என்னை சிக்க வைத்தது
போல
இன்னும் இரண்டொரு நாட்களுக்கு
மழையை மயக்கி வைத்திருக்கச் சொல்லி
மேகங்களுக்கு புத்திகூறு.
*
மழை உன் வீட்டில் தங்கி
இருந்தால்
வேலைக்கரியைப்போல
மரங்கள் மலர்களின் ஆடைகளைக்
கழுவி
புதிதாக்கிக் கொடுத்துக்
கொண்டே இருக்கும்.
நீ உன் ஆடைகளை
காலையிலும் மாலையிலும்
இரவல் கொடுத்துவிட்டு
புலம்பித் திரிய வேண்டியதில்லை.
*
இன்றைக்கு எப்படியும்
சூரியன் அந்தி
நாலரை மணிக்கெல்லாம்
தூங்கச் சென்றுவிடும்.
நோன்புப் பெருநாளைக்கு
உடுப்பு வாங்குவதற்கு
புடவை கடைத்தெருக்களில்
பொம்பளைகள் அலை மோதுவது
போல
ஊர் முழுக்க அபாயா போட்ட
மேகங்கள்
உலாத்தித் திரிகின்றன!
*
இன்றைய மழை சும்மா வராது.
உனக்கு ஏதாவது
செப்பு தூக்கிக்கொண்டுதான்
வரும்!
