(அஸ்லம் எஸ்.மௌலானா)
நாட்டில் தேசிய நல்லிணக்கம், இன ஒருமைப்பாடு, சமத்துவம் என்பவற்றை உறுதி செய்யும் வகையில் சுதந்திர தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கு திடசங்கற்பம் பூணுவோம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 68ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;
"எமது நாட்டை பொருத்தவரை எப்போது சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகள், அபிலாஷைகள் உறுதி செய்யப்பட்டு, இன சமத்துவம் பேணப்படுகின்ற சூழ்நிலை ஏற்படுமோ அப்போதுதான் நாம் உண்மையான சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும்.
அதற்கான சூழல் தற்போது ஏற்பட்டிருப்பதையிட்டு இன்றைய சுதந்திர தினத்தில் எம்மால் மகிழ்ச்சியடைய முடியாமல் இருக்க முடியாது.
இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து மக்களும் கூட்டாகப் போராடி நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தது போன்று கடந்த வருடம் அனைத்து இன மக்களும் தமது வாக்குப் பலத்தின் மூலம் சிறுபான்மையினருக்கு எதிரான சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டி, நல்லாட்சிக்கு வித்திட்டதன் மூலம் அதற்கான் அத்திபாரம் இடப்பட்டிருக்கிறது.
ஏகாதிபத்திய நாடுகளின் பிடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக பெரும்பான்மை சிங்களவருடன் தமிழ், முஸ்லிம் சிறுபான்மைச் சமூகத்தினரும் இணைந்தே போராடினர். எனினும் அதன் மூலம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த போதிலும் காலத்திற்கு காலம் பதவிக்கு வந்த ஆட்சியாளர்களினால் சிறுபான்மையினர் பல்வேறு வகையிலும் நசுக்கப்பட்டு அவர்களது உரிமைகள், அபிலாஷைகள் மறுக்கப்பட்டு வந்துள்ளன.
இதன் காரணமாக ஆயுதப் போராடம் வெடித்து நாடு பல்வேறு வகையிலும் அழிவுகளையும் பின்னடைவுகளையும் சந்தித்தது. பின்னர் முப்பது வருட கால யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் சிறுபான்மையினரின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படாமல் பேரினவாதம் தாண்டவமாடியத்தை நாம் நினைத்துப் பார்க்கிறோம்.
இதன் ஒரு அங்கமாக கடந்த ஆட்சியில் முஸ்லிம்களின் சமய, கலாசார, பொருளாதார உரிமைகள் பாதிக்கப்பட்டதுடன் அவர்களது இருப்புக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே ஜனநாயக ரீதியான புரட்சியின் மூலம் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு, சிறுபான்மையினருக்கு பிரகாசமான ஒளிக்கீற்று தென்படத் தொடங்கியுள்ளது.
எவ்வாறாயினும் மழை விட்டும் தூவானம் ஓயவில்லை என்பதுபோல் இந்த நல்லாட்சியிலும் அங்கும் இங்குமாக பேரினவாத சங்கு முழங்கிய வண்ணமே உள்ளது.
சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளை அரசியல் யாப்பு ரீதியாக உறுதி செய்வதற்கான அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ள இந்த நல்ல சூலில் இத்தகைய பேரினவாத முழக்கங்கள் அதனை சீர்குலைக்க எத்தனிக்கலாம் என்கிற அச்சம் எழுகின்றது.
ஆகையினால் சிறுபான்மைச் சமூகங்கள் தமது இலக்குகளை அடைந்து கொள்வதில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு நாம் இன்றைய சுதந்திர தினத்தில் பெரும்பான்மை சமூகத்தினருக்கு நல்ல செய்திகளை கொண்டு செல்லும் வகையில் எமது சுதந்திர கொண்டாட்டங்கள் அமைதல் வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்" என்று நிஸாம் காரியப்பர் குறிப்பிட்டுள்ளார்.
