( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அரசாங்கத்தின் நூறுநாள் வேலைத் திட்டத்தின் கீழ் சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள கற்பிணித்தாய்மாருக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும் சத்துணவு வழங்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (11) சம்மாந்துறை பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம் பெற்றது.
பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.எம்.எம்.சபீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், சமூகசேவைகள், சிறுவர் நன்நடத்தை, மகளீர் விவகார, கூட்டுறவு அபிவிரத்தி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, சத்துணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் சம்மாந்துறைப் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஐ.எல்.முகம்மட் லாபீர், அமைச்சரின் பொது மக்கள் தொடர்பதிகாரி யூ.எல்.பஸீர், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஏ.எம்.தபீக் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மொத்தம் 1043 தாய்மாருக்கு ஒரு மாதத்திற்கான சத்துணவாக ரூபாய் 2000 பெறுமதியான சத்துணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இன்னும் 09 மாதங்களுக்கு இவ்வாறான பொதிகள் வழங்கி வைக்கப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
மாகாண அமைச்சர் மன்சூர் இங்கு உரைநிகழ்த்துகையில் “ இன்று நாம் உட்கொள்ளும் உணவுகள் எல்லாவற்றிலும் நச்சுத் தன்மை கலந்திருக்கின்றது. மரக்கறி, பழவகைகள் போன்றவற்றில் காணப்படும் புளுக்களால் கூட தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு நச்சுத் தன்மை காணப்படுகின்றது.
இவ்வாறான நச்சுத் தன்மையால் நாம் நாளுக்கு நாள் செத்துக் கொண்டிருக்கிறோம். இதிலிருந்து நாம் விடுபட்டு, நச்சுத்தன்மையற்ற நிறையுணவை நாளும் உண்ணவேண்டும். அதன் மூலம் சுகதேகிகளாக வாழவேண்டும் என்பதற்காகவே நமது அரசாங்கம் கற்பிணித் தாய்மாருக்கு இத்திட்டத்தை அமுல்படுத்துகின்றது ” எனத் தெரிவித்தார்.