
நல்லாட்சியில் பெற்றுக் கொண்ட நல்ல அமைச்சுகளும் உறங்கு நிலையில் தொடரும் முஸ்லிம் விவகாரங்களும்
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
நல்லாட்சி அரசின் நூறு நாள் வேலைத் திட்டம் என்ற கால எல்லை முடிவடையும் நிலையில் அந்த திட்டத்தின் கீழ் தொடங்கிய சில பணிகளை புதிய அரசு முனைப்புடன் முன்னெடுத்துச் செல்கிறது. பொதுமக்கள் நலன் தேசிய அபிவிருத்தி, அரசியல் என்று இன்னோரன்ன விடயங்கள் அந்த திட்டத்தில் அடங்கப் பெற்றுள்ளன.
ஆட்சியமைப்பதற்கு உறுதுணையாக நின்ற கட்சிகள் விசேடமாக, சிறுபான்மை இனக் கட்சிகள் முன்வைத்த சில கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்ட நிலையில் அவற்றின் சிலவற்றையும் புதிய அரசு நூறுநாட்கள் திட்டத்தின் கீழ் நிறைவேற்றிக் கொடுக்கவும் தவறவில்லை.
இந்த அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பான தமிழர் சமுதாயம் சார்பாக முன்வைத்த பல கோரிக்கைகளில் சிலவற்றினை அதாவது, கையளவேனும் நிறைவேற்றிக் கொடுத்துள்ளது புதிய அரசு. வடக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் அவற்றில் சில நூறு ஏக்கர்களேனும் விடுவிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை, வடக்கு, கிழக்கில் இராணுவ சேவையிலிருந்த ஆளுநர்களுக்குப் பதிலாக சிவில் அதிகாரிகள் இருவரை இரு மாகாணங்களுக்கும் நியமித்தமை, வடக்கில் தொழில்வாய்ப்புகளை வழங்கியமை என்று சில விடயங்களைச் சிறிதாகவேனும் இன்றைய அரசு நிறைவேற்றிக் கொடுத்துள்ளது.



