Featured Home (TOP)

Recent Comments

Tuesday, July 21, 2015

Unknown

ஹிஸ்புல்லாஹ்வின் சுவரொட்டி ஒட்டுவதைத் தடுத்த நவ முஸ்லிம் மீது சமுர்த்தி உத்தியோகத்தர் தாக்குதல்! மட்டக்களப்பில் முதலாவது தேர்தல் வன்முறை பதிவு

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)

முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் சுவரொட்டியை ஒட்ட வேண்டாம் எனத் தடுத்த காத்தான்குடி, பாலமுனைக் கிராமத்தைச் சேர்ந்த அ. முகமட் உமர் என்பவரைத் தாக்கியதுடன், அவரது வீட்டினுள் புகுந்து பாவனைப் பொருட்களையும் உடைத்துச் சேதப்படுத்திய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவருக்கு எதிரான தேர்தல் வன்முறைச் சம்பவம் ஒன்று மட்டக்களப்பு தேர்தல் அலுவலகத்தில் இன்று 21.07.2015 செவ்வாய்க்கிழமை இரவு 09:20க்கு பதிவாகியுள்ளது.

இந்தத் தேர்தல் வன்முறைச் சம்பவம் பற்றி பாதிக்கப்பட்ட நவ முஸ்லிம் சகோதரரான அன்டனி முகமட் உமர் என்பவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:

நேற்று 20ம் திகதி திங்கட்கிழமை மாலை 07:45 மணியளவில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் முகமட் நவாஸ் என அழைக்கப்படும் பரீட் என்பவரும், றிஸ்வான் என்பவரும் நான் கடமையாற்றும் கடைக்கு ஹிஸ்புல்லாஹ்வின் தேர்தல் சம்பந்தப்பட்ட போஸ்டர்களை ஒட்டுவதற்கு வந்தார்கள்.

அவற்றை ஒட்ட வேண்டாம் என நான் கூறினேன்.  அதற்காக அவர்கள் எனக்கு அடித்தார்கள். நான் அவசர பொலிசாரின் 119 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு விடயத்தைக் கூறினேன். உடனடியாக சம்பவ இடத்திற்கு வருவதாகச் சொன்னார்கள். ஆனால் வரவில்லை.

இதனால் நான் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்வதற்காகச் சென்றேன். உமது முறைப்பாட்டைப் பாரம் எடுக்க முடியாது என்று அங்கிருந்த பொலீசார் கூறினார்கள். அங்கே என்னைத் தாக்கிய சமுர்த்தி உத்தியோகத்தரும் பொலீசாருடன் இருந்தார்.

பின்னர் மட்டக்களப்பு வைத்தியசாலைக்குச் சென்று 09ம் இலக்க வார்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றேன். இவ்வாறு நான் வைத்தியசாலையில் தங்கியிருந்தபோது, எனது வீட்டுக்குச் சென்ற இந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரும், அவரது நண்பரும் அங்கிருந்த தொலைக்காட்சி மற்றும் கண்ணாடி கபேட் உள்ளிட்ட பொருட்களை எல்லாம் அடித்து உடைத்துள்ளார்கள். எனது மனைவி நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த அடாவடித்தனத்தினால் அவர் பலத்த அதிர்ச்சிக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளார்.

நான் வைத்தியசாலையில் இருந்தபோது அங்கிருந்த பொலீசார் என்னிடம் வாக்கு மூலம் பெற்றனர். பின்னர் அங்கிருந்து வெளியேறிய நான் மட்டக்களப்பிலுள்ள தேர்தல் திணைக்களத்திற்குச் சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் இதுபற்றி முறையிட்டேன். அவர்கள் எனது முறைப்பாட்டைப் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னார்கள். காத்தான்குடிப் பொலிசாருடன் தொடர்பு கொண்டு எனது முறைப்பாட்டைப் பதிவு செய்யுமாறும் கூறினார்கள். இதற்கமைய எனது முறைப்பாடு ஊஐடீ2ஃ365ஃ223ஃ என்ற இலக்கத்தில் காத்தான்குடி பொலிசால் பதிவு செய்யப்பட்டது.

என்றாலும் சம்பந்தப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தரையும், அவருடன் வந்தவரையும் இதுவரை பொலீசார் கைது செய்யவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு வந்து 17 வருடங்களாகின்றன. இவ்வாறான கீழ்த்தரமான, காடைத்தனமான அரசியல் அடாவடித்தனங்களை ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் ஆதரவாளர்கள் கைவிட வேண்டும். ஊடகங்கள் எனக்கு நடந்த இந்த அநியாயத்தை பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார்.





Read More
Unknown

கிழக்கு ஊடக சங்கத்தின் ஊடக அறிக்கை: தகவலறியும் உரிமை தொடர்பான விழிப்பூட்டும் பிரசுரங்கள் மட்டக்களப்பிலும் விநியோகம்

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)

கிழக்கு ஊடக சங்கம் முன்னெடுத்து வரும் பொதுமக்களுக்கான தகவல் அறியும் உரிமை மற்றும் சட்டத்திற்கு முரணான தேர்தல் நடவடிக்கைகளை வெளிக்கொணரும் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் கௌரவிக்கும் நிகழ்ச்சித் திட்டம் என்பன தொடர்பாக நேற்றைய தினம் (20ம் திகதி) திங்கட்கிழமை மட்டக்களப்பு நகரிலும், மகாத்மா காந்தி பூங்காவிலுமாக பொதுமக்களுக்கு பிரசுரங்கள் பரவலாக விநியோகிக்கப்பட்டன. அதன்போது பிடிக்கப்பட்ட புகைப்படங்களே இங்கே காட்சிப்படுத்தப்படுகின்றன.











Read More
Unknown

மட்டு. ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாசலில் வளரும் அரச மரம்

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)

மட்டக்களப்பு நகரின் மத்தியில் அமைந்துள்ள ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாசலில் மேற்பகுதியில் அரச மரம் ஒன்று காக்கை எச்சத்தினால் விதைக்கப்பட்டு வளர்ந்து வருவதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இது குறித்து மேற்படி பள்ளிவாசல் நிர்வாகிகள் உடன் கவனம் செலுத்த வேண்டும் என இப்பள்ளிவாசல் ஜமாஅத்தார்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.



Read More
Unknown

சக வேட்பாளர்களின் மானம், மரியாதையில் கை வைத்து விமர்சிக்காதீர்கள்: காத்தான்குடியில் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)

ஒரு முஸ்லிமுடைய மானம், மரியாதையில் கைவைப்பது, அவரை இழிவுபடுத்துவது, அவதூறு கூறி அநியாயமாக விமர்சிப்பது போன்ற இழி செயல்களை நாம் பின்பற்றுகின்ற இஸ்லாம் மார்க்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. இதன் காரணமாகவே இன்று முற்பகல் எனது பேச்சாளர்களையும், ஆதரவாளர்களையும் நான் எனது அலுவலகத்திற்கு வரவழைத்து மிகவும் நாகரீகமாக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் தலைமை வேட்பாளராகப் போட்டியிடுபவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஐ.ம.சு.கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரச்சாரக்கூட்டம் கடந்த 20ம் திகதி திங்கட்கிழமை மாலை காத்தான்குடி குட்வின் சதுக்கத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உரையாற்றத் தொடங்கியபோது மேற்கண்டவாறு அவர் தெரிவித்திருந்த போதிலும், அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸில் அவரை எதிர்த்துப் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை மிகவும் மோசமான வார்த்தைகளால் அவர் தாக்கிப் பேசினார்.

ஒரு கட்டத்தில் அவரது முன்னாள் அரசியல் விசுவாசியாகவும், இறையச்சமிக்க 'தஃவாதாரி' என காத்தான்குடியில் அவரால் பகிரங்கமாகப் போற்றப்பட்டவருமான இந்நாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கை மறைமுகமாக (மென்டல்) ஒரு பைத்தியம் என்றும் அவர் இழித்துரைத்தார்.

ஸ்ரீ.ல.மு.காங்கிரஸுடன் இத்தேர்தலில் கூட்டுச் சேர்ந்து தனக்கு மிகப்பெரும் சவாலாக இம்மாவட்டத் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்ற நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மானையும் அவர் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்துப் பேசியதுடன், இத்தேர்தல் முடிவுகள் வெளியானதுடன் அவரையும், இவ்வூரிலுள்ள நல்லாட்சிக்காரர்களையும் இந்த ஊரை விட்டே ஓட வைக்க வேண்டும் எனவும் அவர் பகிரங்க எச்சரிப்புடன் கேட்டுக் கொண்டார்.

முஸ்லிமுடைய மானம், மரியாதை குறித்து முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா நேற்றைய தினம் உரையாற்றிய அதே இடத்தில் நின்றுதான், கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற காத்தான்குடி நகர சபைக்கான முதலாவது தேர்தல் பிரச்சாரத்தின்போதும் அவர் உள்ளுர் பத்திரிகை ஆசிரியர் ஒருவரை உலமாக்களையும் மேடையில் வைத்துக் கொண்டு மிகக் கேவலமாக இழிவுபடுத்திப் பேசியதையும், அந்த ஊடகவியலாளரை நேரடியாகத் தாக்குமாறும் ஆக்ரோஷமாகப் பேசியதை இக்கூட்டத்திற்குச் சமூகமளித்திருந்த பலரும் இத்தருணத்தில் நினைவுபடுத்திப் பேசிக் கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.

அவரது பேச்சின் ஆரம்பத்தில், வேட்புமனுவைத் தாக்கல் செய்த அன்றைய தினமே ஐ.ம.சு. கூட்டமைப்பினது ஆசனமும், தனது வெற்றியும் உறுதிப்படுத்தப்பட்டு விட்டதாகத் தெரிவித்து, தனது கடந்த காலத் தேர்தல் வரலாறுகள் எவற்றிலும் இவ்வாறான ஒரு இலகுவான வெற்றியை இறைவன் ஒரு போதும் தந்ததே இல்லை என்றும் புளகாங்கிதமாகக் கூறினார்.

எனினும், அவரது பிந்திய உரையின்போது, 27,000 விருப்பு வாக்குகளைப் பெற்றும் கூட தன்னால் ஒரு தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்றும், அதனால் இந்தத் தேர்தலில் தனது வெற்றி இலக்கை அடைய 28,000 விருப்பு வாக்குகள் தேவைப்படும் என்றும், காத்தான்குடி முஸ்லிம்கள் மட்டுமல்ல, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் வாக்காளர்களின் வாக்குகளும் தனது வெற்றிக்குத் தேவை எனக் கூறியபோது, முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் அவரது உரை குறித்து அவரது தீவிர ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் முகஞ்சுளித்துக் கொண்டனர்.

வேட்புமனுத் தாக்கல் தினத்தில் தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டதாகக் குறிப்பிட்ட முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, பின்னர் இவ்வாறு 28,000 விருப்பு வாக்குகளின் தேவை பற்றியும், தமிழ் மக்களின் வாக்குகளையும் பெறுவதற்காகவே முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதந்தாங்கிய முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்ட முன்னாள் பயங்கரவாதி பிள்ளையான்) போன்றவர்களையும் தான் ஐ.ம.சு.கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் சேர்த்துக் கொண்டுள்ளதாகவும் கூறியதானது, அங்கு சமூகமளித்திருந்த முஸ்லிம் பொதுமக்களை சஞ்சலத்திற்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.

எதிரணியினரின் பிரச்சாரத்தின்படி வெற்றிலைக்கு அளிக்கப்படும் வாக்குகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்யும் என்பதை வெகுவாக மறுத்துப் பேசிய முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, அவ்வாறு அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்றால் காத்தான்குடியில் இருப்பவர்கள் குருணாகலைக்குச் சென்றே வெற்றிலைக்கும், மகிந்த ராஜபக்ஷவின் விருப்பு இலக்கத்திற்கும் வாக்களிக்க வேண்டும் என்றும் விளக்கம் கூறினார்.

அவரது இந்த விளக்கத்தைக் கேட்ட வர்த்தகர் ஒருவர், இங்கே நாம் வெற்றிலைச் சின்னத்திற்கு அளிக்கும் வாக்குகளின் மூலமாக ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேசியப்பட்டியலிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் உறவுக்காரர்களும் எம்.பி.யாகி விட வாய்ப்பு ஏற்படும்தானே? என எதிர்க்கேள்வி எழுப்பியது பலரையும் சிந்திக்கத் தூண்டியது.

தான் இத்தேர்தலில் தோல்வியடைந்து, தமிழர் ஒருவர் ஐ.ம.சு. கூட்டமைப்பின் சார்பில் எம்.பி.யானாலும்கூட, தன்னையும் எம்.பி. ஆக்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களுடன் தான் தெளிவான ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருப்பதாகவும் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தனதுரையில் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டார். எனினும் அவ்வாறான ஒப்பந்தம் எதனையும் அவர் சமூகமளித்தவர்களின் முன்னால் எடுத்துக் காட்டவில்லை. இதுவும் அவரது வழமையான தேர்தல் பிரச்சார புருடாவில் ஒன்றாக இருக்கும் என மக்கள் அபிப்பிராயம் தெரிவித்தனர்.


Read More