உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தயாராகும் வகையில் சாகச செயல்களில் களமிறங்கியுள்ளார் அணித்தலைவர் டோனி.
அவுஸ்திரேலியா சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை (0–2) இழந்தது, முத்தரப்பு தொடரில் ஒரு வெற்றி கூட பெறாமல் வெளியேறியது.
இதனால் மனதளவில் வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தயாராகும் வகையில் ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்தது.
இரண்டு நாட்கள் எங்காவது சென்று பொழுதை கழித்துவிட்டு வருமாறு இந்திய வீரர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதைப் பயன்படுத்தி பல வீரர்கள் அவுஸ்திரேலியாவில் உள்ள தங்கள் உறவினர்கள், நண்பர்களை பார்க்க சென்றுள்ளனர்.
ஸ்டூவர்ட் பின்னி சிட்னியில் உள்ள அக்கா வீட்டுக்கு சென்றார். ஷிகர் தவான் தனது மனைவி, குழந்தைகளுடன் மெல்போர்ன் சென்றுள்ளார்.
ஆனால் எதிலும் வித்தியாசம் காட்டும் டோனி கிடைத்த ஓய்வு நேரத்தில் சாகச செயல்கள் செய்ய களமிறங்கியுள்ளார்.
இதற்காக இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், மோகித் சர்மா என மூன்று பேரையும் அழைத்துக் கொண்டு, அடிலெய்டு புறநகர் பகுதியில் உள்ள சாகச பார்க்கிற்கு சென்றுள்ளார்.
இங்கு மலையேறுவது, மீன் பிடிப்பது, படகு சவாரி என பொழுது போக்குகின்றனர்.
