கொழும்பு -
புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் மாற்றம் செய்யும்போதே தேர்தல் முறையிலும் மாற்றம் செய்துவிடவேண்டும். இல்லாவிடின் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஆதரவு வழங்காது என்று கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் மாற்றம் செய்யும்போதே தேர்தல் முறையிலும் மாற்றம் செய்வதற்கு சுதந்திரக் கட்சி தனது முழுமையான ஆதரவை வழங்கும். இதற்கு 100 நாள் அல்ல 200 நாட்களையும் எடுத்துக்கொள்ளுங்கள் பரவாயில்லை. மேலும் எமது ஆதரவு இன்றி எதனையும் செய்ய முடியாது என்பதனையும் மறந்துவிடவேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒருவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேர்தல் முறையில் மாற்றத்தைக் கொண்டு வர விரும்பாவிடின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை தைரியமாக கொண்டுவரலாம். அதற்கு ஆதரவு வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். இவை தொடர்பாக கட்டுநாயக்கவில் இடம்பெற்ற செயலமர்வின்போது விரிவாக கலந்துரையாடினோம் என்றும் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.
கட்டுநாயக்கவில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கான செயலமர்வு தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த செயலமர்வை முன்னாள் அமைச்சர் டிலான் பெரேராவே ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இது தொடர்பில் குறிப்பிடுகையில்,
புதிய அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை ஒன்றை வழங்கியுள்ளனர். அதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மாற்றியமைத்து தேர்தல் முறையையும் மாற்றுவதற்கு மக்களின் ஆணைகிடைத்துள்ளது. இந்நிலையில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இதனை அரசாங்கம் செய்யவேண்டும். அதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி தயாராக இருக்கின்றது.
ஆனால் தேர்தல் முறைமையை மாற்றாமல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மட்டும் மாற்றுவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் கையை உயர்த்தாது. எமது ஆதரவின்றி அரசாங்கத்தினால் எந்த மாற்றத்தையும்செய்ய முடியாது என்பதனையும் மறந்துவிடக்கூடாது.
எனவே புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் மாற்றம் செய்யும்போதே தேர்தல் முறையிலும் மாற்றம் செய்துவிடவேண்டும். இல்லாவிடின் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஆதரவு வழங்காது. அதனை மிகவும் தெளிவாக குறிப்பிடுகின்றோம்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் மாற்றம் செய்யும்போதே தேர்தல் முறையிலும் மாற்றம் செய்வதற்கு சுதந்திரக் கட்சி தனது முழுமையான ஆதரவை வழங்கும். இதற்கு 100 நாள் அல்ல 200 நாட்களையும் எடுத்துக்கொள்ளுங்கள் பரவாயில்லை. ஆனால் ஜனாதிபதி முறைமை மாற்றத்துடன் தேர்தல் முறைமையிலும் மாற்றம் வரவேண்டும். தவிர்த்து ஜனாதிபதி முறைமையில் மட்டும் மாற்றத்தை செய்ய முயற்சிப்பார்களாயின் அதற்கு ஆதரவு வழங்கமாட்டோம் என்பதனை குறிப்பிடவேண்டும்.
மேலும் தேர்தல் முறைமையை மாற்றுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விருப்பம் இல்லாமல் இருந்தால் அந்த பணியை ஜனாதிபதி செய்யலாம். ஜனாதிபதி தேர்தல் முறைமையையும் மாற்றும் யோச னையை தைரியமாக கொண்டுவரலாம். நாங்கள் ஆதரவு வழங்குவோம். எனவே இந்த விடயத்தை அரசாங்கத்துக்கு நாங்கள் தெளிவான முறையில் கூறுகின்றோம் என்றார்.
Sourec- Virakesary
