காத்தான்குடியில் புதிதாக திறக்கபடவிருக்கும் இஸ்லாமிய அருங்காட்சியகத்திற்கான கட்டடவேலைகள் மிகவும் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில், அதனுள் வைப்பதற்காக வேண்டி கொண்டுவரப்பட்டிருக்கும் உருவச் சிலைகள் தொடர்பில் தற்போது பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டிருக்கின்றன.
மியூசியத்தின் உள்ளே சிலைகளை பிரதியமைசசர் ஹிஸ்புல்லாஹ் வைக்கப்போகிறார் என்ற கருத்து கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது பலராலும் எடுத்துச் சொல்லப்பட்டாலும் அது அப்போது பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.
தற்போது உருவச் சிலைகளின் படங்கள் முகநூல் வழியாக வெளிவந்த போது இப்படியான ஆபாசச் சிலைகளையா வைக்கப்போகிறார்கள். உருவச் சிலையை இல்லாதொழிக்க வந்த மார்க்கத்தை முழுமையாக பின்பற்றுகின்ற ஒரு ஊரில் இதை வைப்பது முறையாகுமா..? உலமா சபை சம்மேளனம் போன்றவை உடனடியாக இதனை தடுத்து நிறுத்த முன் வரவேண்டும் என்ற கருத்துக்கள் தற்போது முன்வைக்கப்பட்டு வருகிறன.
இவ்விடயத்தின் பாரதூரத்தினை பொதுமக்கள் பலரும் சம்மேளனத்திற்கும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தனர். இவ்வூரின் மார்க்க விடயங்களை கையாளும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா மேற்படி மியூசியத்தில் வைக்கப்படவிருக்கும் சிலைகளைப் பார்வையிட வேண்டுமென்றும் அதற்கான நேரத்தினை தருமாறும் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் கோரியிருந்தனர். ஆனால், இவ்வேண்டுகோளை ஏற்காத ஹிஸ்புல்லாஹ் சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் சுபைர் அவர்களையும், ஜம்இய்யாவின் தலைவர் அலியார் மௌலவி அவர்களையும் அழைத்துச் சென்று ஒரு சில சிலைகளைக் காட்டிவிட்டு இது சம்பந்தமாக எகிப்பு பல்கலைக் கழக முப்தி ஜாதில் ஹக் அவர்களின் பத்வா ஒன்றையும் கொடுத்து அனுப்பியிருக்கிறார்.
இது இவ்வாறு இருக்க, காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் பத்வா குழு இவ்வியடத்தினை ஆராய்ந்து மேற்படி சிலைகளை வைப்பது ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இது ஹறாமான செயல் என்றும் தீர்மானித்து சம்மேளன முக்கியஸ்தர்களுடன் இது சம்பந்தமாக கலந்துரையாடி முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு தெரியப்படுத்துவதென தீர்மானித்திருந்தது.
அதனடிப்படையில் கடந்த 26.02.2015ம் திகதி காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவில் இது சம்பந்தமான கூட்டம் கூட்டப்பட்டது.
சம்மேளனத்தின் தலைவர் மற்றும் ஜம்இய்யாவின் தலைவர் இருவரும் இவ்விடயத்தில் ஆகும் என்ற நிலைப்பாட்டில் இருக்க, ஏனைய அனைத்து உலமாக்களும் இதனை ஹறாம் என்று கூறிக் கொண்டிருந்தனர். சகோ. றிஸ்வான் மதனி இவ்விடயத்தினை மிகத் தெளிவாக சபைக்கு விளங்கப்படுத்தினார். இதனை சபை மன நிறைவோடு ஏற்றுக் கொண்டாலும் இவ்விருவரும் இதில் மிக விடாப்பிடியாக நின்றதாக அதில் கலந்து கொண்ட மூத்த உலமா எம்மிடம் குறிப்பிட்டார்.
மேற்படி சிலைகளை வைப்பதற்கு ஆகும் என்று வாதிடுபவர்கள் இவை சிலைகள் தான் என்றாலும் அவை வணங்குவதற்காக வைக்கப்படவில்லை வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்காகவே வைக்கப்படுகிறது. எகிப்து போன்ற இஸ்லாமிய நாடுகளிலும் வைக்கப்பட்டிருக்கிறது என்று தங்களது செயலுக்கு காரணம் கூறும் ஹிஸ்புல்லாஹ் தரப்பினர் இவை குவைத் நாட்டிலிருந்தே செய்து கொண்டு வரப்பட்டுள்ளது. இவை இப்போது அம்மணச் சிலைகளாகத் தெரிந்தாலும் இவற்றுக்கு அழகான ஆடைகளையும் கொண்டு வந்துள்ளோம் அவற்றை அவைகளுக்கு அணிவித்தே காட்சிப்படுத்துவோம் என்றும் கூறி வருகின்றனர்.
இது ஒரு இஸ்லாமிய ஊர் என்பதாலும், இது இஸ்லாமிய நூதன சாலை என்பதாலும் இங்கு பொருத்தமில்லை எனப் பலபேர் வாதிட்டாலும் இந்தப் பெயர் காலப்போக்கில் மாறிவிடும் என்பதையும் எமக்கு வரலாறு சொல்லித்தருகிறது.
அதாவது காத்தான்குடியில் பாரிய அளவில் கட்டி முடிக்கப்பட்ட ஒரு மண்டபத்திற்கு ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபம் என்று பெயர் வைக்கப்பட்டது. இது நாளடைவில் இஸ்லாமிய என்ற சொல் நீக்கப்பட்டு ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபமாக மாறியது. இதன் பின்னர் கலாசாரம் எடுக்கப்பட்டு இப்போது ஹிஸ்புல்லாஹ் மண்டபமாக மாறியிருக்கிறது.
ஆகவேதான், எதிர் காலத்தில் இந்த மியூசியமும் இஸ்லாம் கலாசாரம் எல்லாம் அழிந்து சாதாரண ஒரு மியூசியமாக மாற வாய்ப்பிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
வழமைபோல் உலமாக்கள் எனறாலும் சரி, யார் எதிர்த்தாலும் என்ன சொன்னாலும் நான் எடுத்த காரியத்தை செய்து முடித்தே ஆகுவேன் எனக் கங்கணங் கட்டிக் கொண்டு செயற்படும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பலரிடம் அவர்கள் அப்படித்தான் கதை;துக் கொண்டிருப்பார்கள் நாம் செய்ய வேண்டியதை செய்ய வேண்டியதுதான் என்று சொல்லி வருவதாகவும் தெரிய வருகிறது.
வீதி அபிவிருத்தி, கட்டிடங்கள் உடைப்பு, மையவாடி மேல் கட்டிடம் கட்டுதல் போன்றவற்றில் பல அமைப்புக்களும் சமூகத் தலைவர்களும் பிரதியமைச்சரிடம் தோற்றுப்போன வரலாறுகளும் எம்மிடம் இருக்கிறது.
தாங்கள் புத்திஜீவிகள் என தம்மைக்கூறிக் கொள்ளும் பலர் பிடவைக்கடைகளில் உருவச் சிலைகள் இல்லையா அவற்றிக்கு அடை அணிவிக்க வில்லையா...? அவைகள் வணங்கப்படுகிறதா..? பிரதான வீதியில் சிலை வைத்தால் உடைக்கிறார்கள் உள்ளே வைத்தாலுமா உடைப்பார்கள் போன்ற கேள்விகளையும் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
இஸ்லாத்தில் சிலைகள் மட்டும் ஹறாம் அல்ல வட்டி வங்கிகளும் ஹறாம் தானே ஏன் அவற்றுக்காக இந்த சம்மேளனமும் உலமாக்களும் கூடி ஆலோசிக்க வில்லை. அதற்காக பத்வா வழங்கவில்லை எனச் கேள்வி கேட்கும் சமூக அக்கறையாளர்கள் சிலைகளை வைக்க அனுமதித்தால் எதிர்காலத்தில் இஸ்லாத்தில் ஹறாமான சாராயத்தவறனைகளையும் திறப்பார்கள் அதனையும் தடுக்க முடியாமல் தடுமாறி பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்ற ஏக்கத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
(இது தொடர்பிலான உங்கள் கருத்துக்களையும், குறிப்பாக சம்மந்தப்பட்டவர்களின் கருத்துக்களையும் எதிர்பார்கின்றோம்)
ஆக்கத்திற்கு பொறுப்பு ஆக்கியோரே தவிர அவதானியல்ல....


