ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கெதிரான போட்டியில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கை அடைந்து 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
11 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நகரங்களில் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் இன்று பிரிஸ்பேனில் இடம்பெற்ற குழு “பி” க்கான லீக் போட்டியில் அயர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜிய அணிகள் மோதின.
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
அதன்படி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஐக்கிய அரபு இராஜ்ஜிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 278 ஓட்டங்களைப் பெற்றது.
ஐக்கிய அரபு இராஜ்ஜிய அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அசத்திய ஷய்மன் அன்வர் 106 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இது வே ஐக்கியஅரபு இராஜ்ஜிய அணி உலகக் கிண்ண வரலாற்றில் பெற்ற முதலாவது சதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அயர்லாந்து அணி சார்பாக பந்துவீச்சில் செரின்சன், குஷாக்,ஸ்ரிலிங், ஓ பிரையன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
279 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, ஆரம்பத்தில் மிகவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் பின்னர் அதிரடியாக ஆடி வெற்றி இலக்கை அடைந்து 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
அயர்லாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அதிரடியாக ஆடிய வில்சன் 80 ஓட்டங்களையும் ஓ பிரையன் 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் ஐக்கிய அரபு இராஜ்ஜிய அணி சார்பில் ஜாவிட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதேவேளை இதுவரை இடம்பெற்ற உலகக் கிண்ண லீக் போட்டிகள் இரண்டிலும் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி குழு “பி” யில் 4 புள்ளிகளைப் பெற்று 3 ஆம் இடத்திலுள்ளது.
இப் போட்டியின் ஆட்டநாயகனாக அயர்லாந்து அணியின் வில்சன் தெரிவு செய்யப்பட்டார்.
Tags:
