தற்போதைய பாராளுமன்றத்தில் மஹிந்தவின் கொள்கைகளே உள்ளீர்க்கப்பட்டுள்ளது.எனவே, பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்த வேண்டும். இப்பாராளுமன்றத்தின் காலம் காலாவதியாகி விட்டது என அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.
மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த பலர் ஐ.தே.கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட முண்டியடிக்கின்றனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பத்தரமுல்லையிலுள்ள பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்தார். இங்கு அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தற்போதைய பாரளுமன்றம் காலாவதியாகி விட்டது. இன்றும் இப்பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்படுவது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொள்கைகளாகும்.
ஆனால் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியே உள்ளது. எனவே இப்பாராளுமன்றம் மாற வேண்டும்.ஐ.தே.கட்சியினர் அனைவரும் புதிதாக பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டுமென்றே எதிர்பார்த்துள்ளனர். எனவே தேர்தல் முறைமை மாற்றத்திற்கு முன்பதாக பொதுத்தேர்தலை நடத்தி புதிய பாராளுமன்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
அவ்வாறு பொதுத் தேர்தல் நடத்தப்படும் போது நிச்சயம் ஐதேகட்சி வெற்றி பெறும். சுதந்திரக் கட்சியினர் பொதுத்தேர்தல் நடத்தப்படும் போது அதில் ஐ.தே.கட்சியில் போட்டியிடுவதற்காக சுதந்திரக் கட்சியில் பலர் முண்டியடித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஐ.தே. கட்சியில் வேட்பு மனு கேட்டு காத்திருக்கின்றனர்.அவர்களின் விபரங்களை தற்போது வெளியிட முடியாது.
தேசிய அரசு
பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் தேசிய அரசாங்கம் அமைவது தொடர்பாக எவ்விதமான எதிர்ப்பு நிலைப்பாடும் எம்மிடம் கிடையாது. ஏனென்றால் இன்று ஜனாதிபதி பிரதமர் எம்மை சார்ந்தவர்கள்.
அது மட்டுமல்ல எதிர்க்கட்சியினரும் எம்மை சார்ந்தவர்களாகவே உள்ளனர்.
எனவே தேசிய அரசு தொடர்பாக எம்மிடம் எதுவிதமான எதிர்ப்பும் கிடையாது.ஆனால் அதேவேளை ஐ.தே.கட்சியினர் பெரும்பாலானவர்கள் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதையே எதிர்பார்க்கின்றனர்.
நாட்டு மக்களும் தேர்தலையே எதிர்பார்த்திருக்கின்றனர்.
புதிய அரசியலமைப்பு
புதிய அரசியலமைப்பு தொடர்பாக அனைத்து யோசனைகளும் உள்ளடக்கப்பட்டு அதற்கான நகல் தயாரிக்கப்பட்டு விட்டது. அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் இது முன்னெடுக்கப்படவுள்ளது.
தேர்தல் மாற்றம்
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக ஜனாதிபதி பிரதமர் மற்றும் தேர்தல்கள் ஆணையாளருக்கிடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதோடு இது தொடர்பில் இணக்கப்பாடும் காணப்பட்டுள்ளது.
100 நாள்
கடந்த கால ஆட்சியாளர்களை போன்று காட்டு தர்பார் நடத்த முடியாது. குற்றவாளிகள் தொடர்பில் சாட்சியங்கள் திரட்டப்பட்டு தகவல்களை சேகரித்து சட்டப் பிரகாரமே ஒருவரை கைது செய்ய வேண்டும்.
அதை விடுத்து வெள்ளை வான்களில் ஆட்களை கடத்தி அச்சுறுத்த முடியாது.கடந்த 20 வருட கால ஆட்சியில் நாட்டில் சட்டம் ஒழுங்கு இருக்கவில்லை.பெரும்பாலானோர் இவ்வாறான நிலைமைக்கு பழக்கமாகி விட்டனர். அதனாலேயே அவசரப்படுகின்றனர்.
100 நாட்களுக்குள் சட்ட ரீதியாக அனைத்தையும் மேற்கொள்ள கால அவகாசம் போதாது என்றார்.இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பிரதியமைச்சர் கே. வேலாயுதம் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Source - Virakesary
