புதிய தேர்தல் முறையை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான செயற்பாடுகளை இன்றிலிருந்து (நேற்று முதல்) ஆரம்பித்துவிட்டோம்.
அத்துடன், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை புதிய முறையில் நடத்தவே முயற்சிக்கின்றோம் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
தேர்தல் முறையில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதில் அனைத்து கட்சிகளும் புரிந்துணர்வுக்கு வந்துள்ளன. ஆனால், எவ்வாறான முறையை முன்னெடுப்பது என்பதில் இன்னும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் பாராளுமன்றம் கலைக்கப்படும் முன்னர் புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்தி அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை தற்போதே ஆரம்பித்துவிட்டோம். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை புதிய முறையில் நடத்தவே முயற்சிக்கின்றோம். அதனை செய்ய முடியும் என்றும் நம்புகின்றோம்.
தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் அனைத்து கட்சிகளும் புரிந்துணர்வுக்கு வந்துள்ளன. ஆனால் எவ்வாறான முறையை முன்னெடுப்பது என்பதில் இன்னும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. ஆனால் இந்த விடயத்தில் இணக்கப்பாட்டை எட்ட முடியும் என்பது எமது நம்பிக்கையாகும்.
தற்போது இரண்டு முறைமைகள் எமது பரிசீலனையில் உள்ளன. அவற்றை மேலும் முன்னேற்றி கொண்டுவரலாமா என்று சிந்திக்கின்றோம். ஆனால் பொருத்தமானதை தெரிவு செய்வோம். சிறுபான்மை மற்றும் சிறு அரசியல் கட்சிகளுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாத வகையிலேயே இந்த புதிய தேர்தல் முறையை கொண்டுவருவோம்.
தேர்தல் முறை மாற்றப்படுமிடத்து எல்லை மீள் நிர்ணய செயற்பாட்டிலேயே பாரிய சிக்கல் உள்ளது. அதாவது தற்போதைய தேர்தல் முறைமையின் பிரகாரம் தேர்தல் தொகுதிகள் வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்படவி ல்லை. மாறாக தேர்தல் மாவட்டங்களே பிரகடனப்படுத்தப்பட்டு ள்ளன. எனவே தொகுதி முறையிலான தேர்தல் முறை வந்தால் தேர்தல் தொகுதிகளை வர்த்தமானியில் பிரகடனப்படுத்தவேண்டும்.
அப்போது தொகுதி மட்டத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையில் சிக்கல் வரலாம். அதாவது ஒரு தொகுதியில் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் வாக்காளர்களும் மற்றுமொரு தொகுதியில் 40 ஆயிரம் வாக்காளர்களும் இருந்தால் அது சிக்கலாகிவிடும். யாராவது உயர்நீதிமன்றத்தை நாடினால் மேலும் பிரச்சினைகள் வரலாம். எனவே இவை தொடர்பில் நன்றாக சிந்தித்து ஒரு பொருத்தமான முறையை தெரிவு செய்யவேண்டிய நிலை காணப்படுகின்றது.
இதேவேளை பாராளுமன்றம் விரைவில் கலைக்கப்படலாம். சரியான திகதியை என்னால் கூற முடியாது. ஆனால் விரைவில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்றார்.
- TNN
