சென்ற வாரம் திங்கட்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் ஏறத்தாழ மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வந்து விடுவார் எனும் அளவுக்கு பெரும் அலையை உருவாக்கியது போன்ற ஒரு பிரம்மை காணப்பட்டிருந்தது.
மஹிந்த ராஜபக்ச விசாரணைக்காக அழைக்கப்பட்டதற்காக பாராளுமன்றில் இரவு நேரம் தங்கிப் போராட்டம் நடாத்தினார்கள் மஹிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள்.
மறுநாள் வீதி ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது. இந்த இரு நாட்கள் நீடித்த சந்தோசத்தில் இலங்கையில் சிறுபான்மையினத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் அரசியல் நடாத்துவது தாம் தான் என நிரூபிக்கும் வகையில் ஐக்கியத்துக்கு எதிராக தனிச் சிங்களக் கொள்கையின் அடிப்படையிலான தேசியக் கொடியும் காட்சிப்படுத்தப்பட்டது.
இதன் விளைவுகள் எவ்வாறு அமையும் என அரசியல் அவதானிகள் ஏட்டிக்குப் போட்டியாக மாற்றுக் கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்க புதன் கிழமை ஒரு கூட்டம் அதன் பின் கட்சி நடவடிக்கைகளில் நாட்டம் என சிறு நடவடிக்கைகளை மேற்கொண்ட மைத்ரி தன் காரியத்தை மிகச் சாதாரணமாக வென்று புரண்டெழுந்து மஹிந்த அலையை ஜனநாயக சாட்டை கொண்டு அடித்து விரட்டிய சூட்சுமத்தின் வெளிப்பாட்டில் இன்று தங்கு தடையின்றி 19ம் திருத்தச் சட்டம் நிறைவேறியுள்ளது.
சர்வாதிகார கொட்டத்தின் உச்சத்தை அடைந்திருந்த மஹிந்த ராஜபக்சவால் தான் மிகச் சில வருடங்களுக்கு முன்னால் அனைத்து மக்களாலும் விரும்பப்பட்ட மனிதன் என்பதையோ தன் நிலைப்பாட்டு மாற்றம் தனக்கு அழிவைத் தேடித் தருகிறது என்பதையோ நம்ப மறுத்ததன் விளைவில் தான் அசைக்க முடியாத சக்தியென நம்பிக்கொண்டார்.
அதனால் அவருக்கு மைத்ரிபாலவின் 49 வருட கால அரசியல் அனுபவமும் ரணில் விக்கிரமசிங்கவின் அணுகுமுறையும் சந்திரிக்காவின் பலமும் இவையனைத்திலும் பார்க்க மக்களின் சக்தியும் மறந்து போனது.
விளைவு…. ஆட்சி மாறியது ஆனாலும் மஹிந்த ராஜபக்ச தான் இந்நாட்டில் நீண்ட காலம் அரசியல் சூனியத்தால் தொடர்ந்து வந்த யுத்தத்தை நிறைவு செய்த தலைவர் என்ற பெருமையைத் தக்க வைத்துக்கொண்டு வரலாற்றில் இடம்பிடிப்பதற்குப் பதிலாக அதிகார வெறியினால் அழிந்து போன வரலாற்றுக்குரியவராகிறார்.
பதிலுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அன்று அர்ஜுன ரணதுங்கவினால் விபரிக்கப்பட்டது போன்று எதுவித ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடாத கூட்டணியை வைத்துக் கொண்டு ஆம்!
என்னைப் பதவிக்குத் தகுந்தவன் இல்லையென்கிறார்கள், அதிகாரத்துக்குரிய ஜனாதிபதியின் லட்சணம் இல்லையென்கிறார்கள் அதுவெல்லாம் தெரியும்.. ஆனாலும் நான் அதே தவறைச் செய்து அதே பாதைக்குச் செல்ல மாட்டேன் என்று பகிரங்கமாகத் தெரிவித்து அனைவரையும் வெட்கித் தலை குனிய வைத்தார்.
சமாதானமாக காரியத்தை இன்று நடாத்தி முடித்துவிட்டார்!
சபையில் எழும் கேள்விகளை ரணில் பார்த்துக்கொண்டார், வெளியில் ஒருங்கிணைப்புப் பணிகளை சந்திரிக்கா ஏற்றுக்கொண்டார், அதிகாரப் பிரயோகமே இல்லாமல் ஆட்சியின் பலத்தை ஆழமாகப் பதித்திருக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன! இது இலங்கை சமூகத்திற்குக் கிடைத்திருக்கும் நிறைவான தருணம்.
சபையில் எழும் கேள்விகளை ரணில் பார்த்துக்கொண்டார், வெளியில் ஒருங்கிணைப்புப் பணிகளை சந்திரிக்கா ஏற்றுக்கொண்டார், அதிகாரப் பிரயோகமே இல்லாமல் ஆட்சியின் பலத்தை ஆழமாகப் பதித்திருக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன! இது இலங்கை சமூகத்திற்குக் கிடைத்திருக்கும் நிறைவான தருணம்.
கட்சி பேதங்களுக்கப்பால் சமநீதியுடனான ஒரு சமூகம் உருவாகவும் எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுத்து உலகின் வேகத்துக்கு ஈடுகொடுக்கக் கூடிய ஒரு நாடாக உருவாவதற்கும் தேவைப்பட்ட மாற்றத்தை உணர்ந்த இந்தக் கூட்டணியைப் பலப்படுத்த வாக்களித்தோருக்கும் எதிராக இருந்து அவர் தம் கடமையைச் சரிவரச் செய்ய அழுத்தம் கொடுத்தோருக்கும், அனைவருக்கும் வெற்றி கிடைத்துள்ள சந்தர்ப்பம் இது!
சுபீட்சமான எதிர்காலத்துக்காக எல்லாம் வல்ல இறைவனிடமே பிரர்த்தித்துச் செயற்படுவோம்!
சுபீட்சமான எதிர்காலத்துக்காக எல்லாம் வல்ல இறைவனிடமே பிரர்த்தித்துச் செயற்படுவோம்!
