(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுடன் தொலைபேசியில் இன்றிரவு (21) நீண்ட நேரம் உரையாடினேன். இருவரும் சின்ன வயது நண்பர்கள் என்ற அடிப்படையில் தனிப்பட்ட விடயங்கள், உட்பட இன்னோரன்னவை என கருத்துகளை மாறிக் கொண்டிருந்தோம்.
திடீரென நான் அரசியல் பக்கம் பாய்ந்து சில கேள்விகளைத் தொடுத்தேன். நீங்கள் இப்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இல்லைதானே? எனவே சிங்கள தேசிய கட்சிகளில் இணைந்து எமது சுயத்தை இழந்து விடாமல் உங்களது தாய்க் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்ளலாம் அல்லவா? என்று கேட்டேன்.
அவ்வாறு நான் கூறியதற்கு சீற்றமுற்றவராக அது கடைசி வரையும் நடக்காது சித்தீக். இது சத்தியம் என்றார்.
இல்லை.. இல்லை.. பலரும் நீங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்ளப் போவதாகவே கூறுகிறார்கள் என்றேன். அதற்கு அவர் இந்த விடயம் ஒரு போதும் நடக்கமாட்டாது என்றார்.
அப்படியாயின் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் மீண்டும் சேர்ந்து கொள்ளவா போகிறீர்களா? என்றேன்.
சில நொடி மௌனத்தின் பின்னர் நாடாளுமன்றம் கலையட்டும் நல்ல முடிவை அறிவிப்பேன். இந்த விடயம் தொடர்பில் எனது குழுவைச் சேர்ந்த சிலருடன் கலந்துரையாடி எனது தீர்மானத்தை வெளியிடுவேன் என்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உங்களையும் தற்போதைய பிரதியமைச்சரான அமீர் அலியையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் தேர்தல் களத்தில் நிறுத்தும் போதுதானே சில பிரச்சினைகள் வருகின்றன. அமீர் அலியை தேர்தலில் களமிறக்காமல் உங்களையும் மட்டும் போட்டியிடச் செய்தால் கட்சியின் வெற்றி சாதமாகி விடும். அவ்வாறானதொரு இணக்கப்பாடு ஏற்பட்டால் நீங்கள் இணைவதில் என்ன பிரச்சினை உள்ளது?அமீர் அலியை தேசிய பட்டியலில் எம்.பீ ஆக்கினால் சரிதானே என்று ஒரு கேள்வியைக் கேட்டேன்.
அவ்வாறு அவர்கள் செய்வார்களோ தெரியாது. எது எப்படியிருப்பினும் நாடாளுமன்றம் கலையட்டும் நல்ல முடிவை வெளியிடுவேன். இப்போதைய களநிலையில் எதனையும் முன்கூட்டிச் சொல்ல முடியாதுள்ளது என்றார்.
