நேபாள நாட்டில் கடந்த 25-ந் தேதி 7.9 ரிக்டர் அளவுக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை நேற்று 6,624 ஆனது. இந்தஎண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த பேரழிவு நடந்து ஒரு வாரத்திற்கு பின்னர் மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். வீடுகளை இழந்தவர்கள் கூடாரங்களிலும், வாகனங்களிலும், திறந்தவெளிகளிலும் தங்கியுள்ளனர். ஆனாலும் இன்னும் பலர் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற பீதியில் தங்கள் வீடுகளுக்கு திரும்ப விருப்பம் இன்றி உள்ளனர்.
திறந்தவெளியிலும், கூடாரங்களிலும் தங்குவதிலும் நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது. பலர் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
தொடர் மழை, உணவு, குடிநீர் தட்டுப்பாடு, சுகாதார வசதியின்மை போன்ற காரணங்களால் மக்கள் பலவகையான நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
காத்மாண்டு ஆஸ்பத்திரியில் ஏராளமானவர்கள் காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நேபாள நாட்டின் நிவாரண பணிகளுக்கு பல்வேறு நாடுகளும், பல அமைப்புகளும் உதவி வருகின்றன. ‘பேஸ்புக்’ சமூக வலைதளமும் நேபாள நாட்டு நிலநடுக்க நிவாரண பணிகளுக்கு உதவும்படி தங்கள் உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. உலகம் முழுவதும் இந்த வலைதளத்தை பயன்படுத்துவோர் 15 கோடிக்கும் அதிகமான பேர் இதனை பார்த்தனர். இவர்களில் 5 லட்சம் பேர் கடந்த 2 நாட்களில் மட்டும் நிவாரண உதவியாக மொத்தம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.60 கோடி (10 மில்லியன் அமெரிக்க டாலர்) வழங்கியுள்ளனர்.
அந்த தொகையுடன் ‘பேஸ் புக்’ நிறுவனம் கூடுதலாக ரூ.12 கோடி (2 மில்லியன் டாலர்) வழங்குகிறது. ஆக மொத்தம் சுமார் ரூ.72 கோடி நேபாள நிலநடுக்க நிவாரண பணிகளுக்கு அந்த நிறுவனம் வழங்குகிறது.
இதனை அதன் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜுக்கெர்பெர்க் கூறியுள்ளார். இந்த உதவியை செய்த மக்களுக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.
நன்றி-சர்வதேச செய்திகள்
